search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழத்தகுதியான சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு - இந்திய அளவில் திருச்சிக்கு 12-வது இடம்
    X

    வாழத்தகுதியான சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு - இந்திய அளவில் திருச்சிக்கு 12-வது இடம்

    வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் 12-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் திருச்சி பிடித்துள்ளது.
    திருச்சி:

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம் இந்தியாவில் உள்ள நகரங்களில் வாழத்தகுந்த சிறந்த நகரங்கள் அடிப்படையில் நகரங்களை பட்டியலிட்டுள்ளது.

    கல்வி, நிர்வாகம், கலாச்சார அடையாளம், சுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, திறந்த வெளியிடங்கள், மின்சாரம், போக்குவரத்து வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை திடக்கழிவு மேலாண்மை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றின் வசதிகள் அடிப்படையில் இந்த பட்டியலில் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் சென்னை, கோவை, திருச்சி, மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட 111 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றன. இதில் வாழத் தகுந்த சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் முதல் நகரமாக புனே நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை 3-வது இடத்தையும், திருப்பதி 4-வது இடத்தையும் பிடித்தன. இதில் தமிழகத்தில் திருச்சி நகரம் 12- வது இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்

    சென்னை மாநகரம் 14- வது இடத்தையும், கோவை 25, ஈரோடு 26, மதுரை 28, திருப்பூர் 29, நெல்லை 37, திண்டுக்கல் 40, சேலம் 42, தஞ்சை 43, தூத்துக்குடி 44, வேலூர் 48 என தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்கள் இந்தியாவில் வாழத்தகுதி மிக்க நகரங்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளன.

    மொத்தம் 15 பிரிவுகளில் கணக்கெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டதில் சுகாதாரத்தில் தேசிய அளவில் திருச்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதேபோன்று கலாச்சாரத்தில் 3-வது இடத்தையும், மின் வினியோகத்தில் 2-வது இடத்தையும், மாசு குறைக்கப்பட்ட நகரத்தில் 3-வது இடத்தையும், பாதுகாப்பு அம்சங்களில் 9-வது இடத்தையும் திருச்சி பிடித்துள்ளது.

    தேசிய அளவில் திருச்சி நகரம் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் 12-வது இடமும் பிடித்து தமிழகத்தில் முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியான மற்றும் பெருமையான வி‌ஷயம் என திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாநகரில் மாநகராட்சி சார்பில் அதிக அளவிலான பூங்காக்கள் அமைத்து திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பு, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக கையாளுதல் ஆகியவை தேசிய அளவில் திருச்சி 12-வது இடத்திற்கு வருவதற்கு காரணம் என அவர் கூறினார்.

    மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சி கடந்த ஆண்டு 13-வது இடத்தை பிடித்தது இந்த ஆண்டு மேலும் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பங்களிப்போடு திருச்சியை முதல் இடத்திற்கு கொண்டு வருவோம் என்றார். சுகாதார கணக்கெடுப்பு பிரிவில் திருச்சி முதலிடம் பெறுவதற்கு மாநகராட்சி சார்பில் அதிக அளவில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, சுகாதாரத்தை சிறப்பாக பராமரிப்பது காரணம் என அவர் கூறினார்.

    திருச்சி வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் 12-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது போல மலைக்கோட்டை மாநகர மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×