search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரவு 10.30 மணி வரை நடந்த புதுவை சட்டசபை கூட்டம்
    X

    இரவு 10.30 மணி வரை நடந்த புதுவை சட்டசபை கூட்டம்

    புதுவை சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.50-க்கு முடிந்தது. மீண்டும் 4.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடந்தது. இதில் பட்ஜெட்டிற்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. #Pondicherryassembly #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 4-ந்தேதி தொடங்கியது.

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். உள்துறை அனுமதி கிடைக்காததால் கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்த முடியாமல் ஜூன் 5-ந்தேதி மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்பிறகு மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி கூடியது. அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



    தொடர்ந்து கூட்டத் தொடரை இந்த மாதம் 27-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், மத்திய அரசு நேரடியாக நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்தது.

    இந்த வழக்கு கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்காமல் வழக்கை 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இதையடுத்து கடந்த 16-ந்தேதி சட்டசபைக்குள் நுழைய பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் முயன்றனர். ஆனால், சபை காவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.

    ஒரு மணிநேரம் போராட்டம் நடத்திவிட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலைந்து சென்றனர். இன்று சுப்ரீம் கோர்ட்டில் வரும் விசாரணையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.

    அப்படி உத்தரவு பிறப்பித்தால் நியமன எம்.எல். ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க கூட்டத் தொடரை இன்று (வியாழக்கிழமையோடு) முடிப்பது என திட்டமிட்டனர்.

    இதனால் மானிய கோரிக்கை விவாதங்களை சுருக்கி 2 நாட்களில் நடத்துவது என முடிவெடுத்தனர். வழக்கமாக புதுவை சட்டசபை காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிக்கப்படும்.

    ஆனால், நேற்று முன் தினம் 9.30 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. மீண்டும் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது. நேற்றைய தினம் மானிய கோரிக்கை விவாதத்தை முடித்து சட்டசபையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

    இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் மதியம் 1.50-க்கு முடிந்தது மீண்டும் 4.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடந்தது. இதில் பட்ஜெட்டிற்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. #Pondicherryassembly #CMNarayanasamy

    Next Story
    ×