என் மலர்
செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் கடையடைப்பு: வியாபாரிகள் போராட்டம்
திருவிடைமருதூர்:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்கு உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து மதுக்கடைகள் மூடப்பட்டது.
கும்பகோணத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுக்கடை இல்லாத கோவில் நகரமாக கும்பகோணம் திகழ்ந்து வந்தது.
இந்த நிலையில் கும்பகோணம் சக்கரபாணி கோவில் தெற்கு வீதி சண்முகம் தெருவில் கடந்த சனிக்கிழமை டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது.மொத்த மளிகை மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற கூடிய இங்கு கடை திறந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையை முற்றுகையிட்டனர்.
சனிக்கிழமை மதுக்கடையில் சில மணி நேரத்தில் மது விற்பனை முடிந்து விட்டதால் ஊழியர்கள் கடையை பூட்டி சென்று விட்டனர். நேற்று மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதால் மதுக்கடை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு வர்த்தகர் நல கழகம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து இன்று அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் சக்கரபாணி தெற்கு வீதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.மேலும் வியாபாரிகள் கடை வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று சப்-கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளனர்.
சக்கரபாணி தெற்கு வீதி மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.