search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை, தேனி குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    மதுரை, தேனி குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

    பெரியாறு அணையில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    கூடலூர்:

    கடந்த 2 வருடமாக பருவ மழை சரிவர பெய்யாததால் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. மேலும் மதுரை நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வைகை அணைக்கு தண்ணீர் வரத்து போதிய அளவு இல்லை. இதனால் வைகை அணையின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கியுள்ளது.

    15 அடி வரை வைகை அணையில் சேரும் சகதியுமாக உள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிலை உள்ளது. மேலும் தேனி மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதன் காரணமாக பெரியாறு அணையில் இருந்து நேற்று முதல் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    152 அடி உயரம் உள்ள பெரியாறு அணையில் இன்று காலை 110.70 அடி வரை நீர் மட்டம் உள்ளது. அணைக்கு 41 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 225 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1022 மில்லியன் கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வந்து தேனி குடிநீர் தேவைக்கு போக வைகை அணையில் வந்து சேரும்.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.41 அடியாக உள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 33.50 அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.07 அடி.

    கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணையின் நீர் மட்டம் 120.80 அடியாக இருந்தது. நீர் வரத்து 22 கன அடியாகவும், நீர் திறப்பு 338 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 2 ஆயிரத்து 786 மில்லியன் கன அடியாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நீர் மட்டம், வரத்து, இருப்பு ஆகியவை மிக மிக குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×