என் மலர்
செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), தனபாண்டியன் (தே.மு.தி.க.), சீனிவாசன் (பா.ஜனதா) உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.
ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் நகர் பகுதியில் 159 வாக்குச்சாவடிகளும், கிராமப் பகுதிகளில் 132 வாக்குச் சாவடிகளும் மொத்தம் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 97 மையங்களில் இந்த வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 54 வாக்குச்சாவடிகள் பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 பேர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 329 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 629 பேர். இதரர் 22 பேர் ஆகும்.
இந்த தேர்தலுக்கு 582 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மின்னணு எந்திரங்கள் பழுதை சமாளிக்க 15 சதவீத கூடுதல் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 1396 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இன்று மதியம் தேர்தல் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் அமைதியான வாக்குப்பதிவை நடத்தவும் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டு உள்ள 5 கம்பெனி துணை ராணுவத்தினர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் 1600 போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 5 மணிக்கு மேல் ஓட்டுப்போட வரும் நபர்களை அனுமதிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரை மருத்துவக்கல்லூரி அரங்கில் வைக்கப்படுகிறது. வருகிற 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 10 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும்.