search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தீர்மானம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தீர்மானம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    காவிரி நீர் பிரச்சினையில் “காவிரி மேலாண்மை வாரியம்”-“காவிரி ஒழுங்காற்றுக் குழு” என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கி, இவைகளின் மூலம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

    காவிரி மேலாண்மை வாரியத்திற்குத் தான் அரசியல் அங்கீகாரம் உண்டு. கர்நாடக அரசைக் கேள்வி கேட்கவும், கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் இந்தக் குழுவுக்குத் தான் அதிகாரம் உண்டு. இந்தக் குழுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு அமைத்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் எல்லாம் வந்தே இருக்காது.

    இந்தக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து எல்லா தரப்பினரும் தொடர்ந்து வற்புறுத்தியும், மத்திய அரசு என்ன காரணத்தினாலோ இவைகளை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது உடனடியாக இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டு மென்று வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

    காவிரி பிரச்சினை போன்ற பொதுப் பிரச்சினைகள் உருவாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சியிலே இருப்பவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களைக் கூட்டி, அவர்களுடைய கருத்துகளை அறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு எடுப்பது தான் இதுவரையில் தமிழகத்தில் இருந்து வந்த நிலை.

    ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். இதை மாவட்டச் செயலாளர் கூட்டம் கண்டிக்கிறது.

    காவிரிப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடகத்தில் வன்முறைகள் தலைதூக்கி, தமிழ் இளைஞர் சந்தோஷ் என்பவரைக் கடுமையாகத் தாக்கினர்.

    தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களையெல்லாம் தீக்கிரையாக்கினர். பல கோடி ரூபாய் இழப்புகளை கர்நாடகத்தில் தமிழர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கர்நாடகத்தில் சிறையிலே இருந்த கைதிகளை விடுவித்து அவர்கள் மூலமாக, அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    வழக்கமாக குறுவை சாகுபடிக்கென ஜூன் 12ஆம் தேதி வாக்கில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் இதற்குரிய முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக அரசு மேற் கொண்டிருக்க வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்லும் ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை சீரமைத்துப் பராமரிப்பதோடு மட்டு மன்றி, மேட்டூர் அணை நீர்வரத்தை உறுதி செய்யும் வகையில், அணையின் நீர் மட்டத்தைக் கண்காணிப்பதுடன், போதிய நீர் வரத்து இல்லை எனில் கர்நாடக மாநில அரசுடன் பேசி நீர்வரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

    மேற்கண்ட பணிகளைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தமிழக அரசு செயலற்று கிடந்த காரணத்தால், தமிழகம் முழுவது முள்ள விவசாயிகளே சாலையில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எதிர் விளைவாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களும் போராடும் நிலை ஏற்பட்ட தோடு, இருமாநில மக்களிடையே மோதலும், பொருள் சேதமும் ஏற்பட்டது.

    கர்நாடகத்தில் நிலவிய இத்தகைய வன்முறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இழப்புக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டு மென்றும் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×