என் மலர்
டென்னிஸ்

போட்டியில் பங்கேற்கும் 8 வீராங்கனைகளும் மாடல் உடையில் உற்சாகமாக போஸ் கொடுத்த காட்சி.
8 முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்
- 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ரியாத்:
ஆண்டுதோறும் முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'ஸ்டெபிகிராப்' பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் கோகோ காப், ஜெசிகா பெகுலா (இருவரும் அமெரிக்கா), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) ஆகியோரும், 'செரீனா' பிரிவில் விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (இருவரும் அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.137 கோடியாகும். போட்டி கட்டணம், லீக் சுற்றுக்குரிய பரிசு என ஒரு வீராங்கனை தோல்வியே சந்திக்காமல் வாகை சூடினால் ரூ.46½ கோடியை பரிசாக அள்ளுவார். முதல் நாளில் ஸ்வியாடெக்- மேடிசன் கீஸ், அனிசிமோவா- ரைபகினா சந்திக்கிறார்கள்.






