search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    9 அணிகள் பங்கேற்கும் கைப்பந்து லீக் போட்டி: 15-ந்தேதி தொடக்கம்
    X

    9 அணிகள் பங்கேற்கும் கைப்பந்து 'லீக்' போட்டி: 15-ந்தேதி தொடக்கம்

    • 'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
    • 'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும்.

    சென்னை:

    பிரைம் வாலிபால் (கைப்பந்து) 'லீக்' போட்டி 2022-ம் ஆண்டு ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு பெங்களூர், ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் அகமதாபாத் டிபென்டர்ஸ் அணி கோப்பையை வென்றது.

    3-வது ரூபே பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூர் டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ், மும்பை மீட்டி யார்ஸ், புதிதாக இணைந்து உள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

    'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 5' சுற்றுக்கு முன்னேறும்.

    'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும். இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் நடக்கிறது. 15-ந்தேதி நடைபெறும் தொடக்க போட்டிகளில் சென்னை பிளிட்ஸ்-அகமதாபாத் டிபன்டர்ஸ் (மாலை 6.30 மணி), பெங்களூர்-கொல்கத்தா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    சோனிஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    Next Story
    ×