search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி பாட்னாவிடம் தோல்வி
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி பாட்னாவிடம் தோல்வி

    • இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.
    • 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனேயைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு தொடங்கியது. இங்கு நடந்த முதல் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் களம் இறங்கிய தமிழக தலைவாஸ் அணியினர் தொடக்கத்தில் நன்றாக ஆடினர். எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 20-21 என்ற கணக்கில் சற்று பின்தங்கி இருந்தனர்.

    ஆனால் பிற்பாதியில் பாட்னா வீரர்களின் கை ஓங்கியது. தலைவாஸ் அணியை இரண்டு முறை ஆல்-அவுட் ஆக்கி பதிலடி கொடுத்ததுடன் மளமளவென புள்ளிகளை திரட்டினர்.

    முடிவில் பாட்னா அணி 46-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. அதிகபட்சமாக பாட்னா அணியில் சுதாகர் 11 புள்ளிகள் எடுத்து ரைடில் கலக்கினார். தமிழ் தலைவாஸ் தரப்பில் ஹிமான்ஷு 8 புள்ளிகள் எடுத்தார்.

    5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் நீடிக்கிறது. பாட்னா அணி 3 வெற்றி, 3 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து நடந்த திரில்லிங்கான மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வென்றது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    Next Story
    ×