என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இது ஏன் அவுட் இல்லை.. சர்ச்சையான கேட்ச்.. வைரல் வீடியோ
- இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஒரு கேட்ச் சர்ச்சையானது.
தோஹா:
தோஹாவில் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 'ஏ' அணி, பாகிஸ்தான் ஏ அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் விரட்டி பிடித்து வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது சர்ச்சைக்குரிய கேட்ச் சம்பவம் அரங்கேறியது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த நேஹல் வதேரா மற்றும் நமன் தீர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்தனர்.
பந்து சிக்ஸருக்குச் செல்வதைத் தடுத்த நேஹல் வதேரா, பவுண்டரி லைனுக்கு வெளியே செல்வதற்கு முன்பு பந்தை மேலே தூக்கி எறிந்தார். பவுண்டரி லைனுக்குள் இருந்த மற்றொரு வீரரான நமன் தீர், அந்தப் பந்தைப் பிடித்தார்.
இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்துவிட்டதாகக் கொண்டாடத் தொடங்கினர். பேட்ஸ்மேன் சதகத்தும் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, இறுதியில் 'நாட் அவுட்' என்று அறிவித்தது,
நடுவரின் இந்த முடிவால் குழப்பமும், விரக்தியும் அடைந்த இந்திய கேப்டன் ஜித்தேஷ் சர்மா மற்றும் வீரர்கள், நடுவரிடம் சென்று, "ஏன் அவுட் இல்லை?" என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஐசிசி-யின் விதி 19.5.2-இன்படி, ஒரு பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்து காற்றில் பறந்தபடி பந்தைத் தொடலாம். ஆனால், காற்றில் பறந்து பந்தைத் தொட்ட பிறகு, அவர் மீண்டும் தரையைத் தொடுவதற்கு முன்பு பந்து கையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். பந்தைப் பிடித்த பிறகு, பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டால், அது சிக்சராக அறிவிக்கப்படும்.
இந்தச் சம்பவத்தில், நேஹல் வதேரா பந்தை முதல்முறை தொட்ட பிறகு, அதை நமன் திர் பக்கம் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பிறகு, அவர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டாலும், பந்து அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, பந்து இன்னும் ஆட்டத்தில் இருந்ததாகவே கருதப்படும். நமன் தீர் பிடித்த கேட்ச் முற்றிலும் சரியானதும், விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.
ஒருவேளை பந்தை வீசிய வதேரா பவுண்டரி லைன்க்கு உள்ளேயே இருந்ததால் இது நாட் அவுட் கொடுக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.






