search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா?- கர்நாடகாவுடன் இன்று பலப்பரீட்சை
    X

    தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா?- கர்நாடகாவுடன் இன்று பலப்பரீட்சை

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகின்றன.
    67-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி நடப்பு சாம்பியன் கேரளாவை எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு 25-27, 25-14, 25-18, 25-16 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    கடந்த முறை தமிழக அணி கேரளாவிடம் அரையிறுதியில் தோற்றதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளது. மேலும் இந்த தொடரின் ‘லீக்‘ ஆடத்தின் தோற்றதற்கும் பழி தீர்த்துக் கொண்டது. மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தியது.

    இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இதில் தமிழக அணி வென்று சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவுக்கு எதிரான அரையிறுதியில் தமிழக வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இன்றைய இறுதிப் போட்டியிலும் அதே மாதிரியான ஆட்டத்திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் தமிழக அணி உள்ளது. அதே நேரத்தில் ‘லீக்‘ ஆட்டத்தில் கர்நாடகாவிடம் தோற்று இருந்ததால் கவனமுடன் விளையாட வேண்டும்.

    கர்நாடகா எல்லா வகையிலும் சவால் அளிக்ககூடிய அணி. ஏற்கனவே தமிழகத்தை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் ரெயில்வே - கேரளா அணிகள் மோதுகின்றன. ரெயில்வே அணி அரையிறுதியில் 25-19, 25-18, 25-19 என்ற நேர்செட் கணக்கில் மராட்டியத்தையும், கேரளா 25-18, 25-9, 25-9 என்ற கணக்கில் மேற்கு வங்காளத்தையும் வீழ்த்தி இருந்தன.
    Next Story
    ×