search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அறிவோம் சிறுநீரகம்: ஏமாற்றும்... ஏமாந்து விடாதீர்கள்- டாக்டர் சவுந்தரராஜன்
    X

    அறிவோம் சிறுநீரகம்: ஏமாற்றும்... ஏமாந்து விடாதீர்கள்- டாக்டர் சவுந்தரராஜன்

    • வாழ்க்கையில் பல விஷயங்களில் விவரம் புரியாமல் நாம் ஏமாந்து இருப்போம்.
    • சரும பராமரிப்பில் பெண்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

    வாழ்க்கையில் பல விஷயங்களில் விவரம் புரியாமல் நாம் ஏமாந்து இருப்போம். அதேபோல் சிறுநீரக பாதிப்பு விஷயத்திலும் எத்தனையோ பேர் விவரம் தெரியாமல் ஏமாந்து போவது உண்டு. அப்படிப்பட்ட பலரை நானே சந்தித்து இருக்கிறேன்.

    பெண்களை பொறுத்தவரை மாதந்தோறும் வரும் மாதவிடாய் காலங்களில் அதிகமான ரத்தபோக்கு சில நேரங்களில் ஏற்படும்.சில சமயங்களில் முறையற்ற மாதவிடாய் ஏற்படலாம். சில நேரம் திடீரென்று நின்றும் போகும். இதை மாதவிடாய் பிரச்சினை தான் என்று பெண்களே முடிவு செய்துவிடுவார்கள். ஆனால் செயலிழந்து போகும் சிறுநீரகத்தாலும் இந்த பிரச்சினை வரலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.

    தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நான் மருத்துவராக இருந்த போது இளம் வயது பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அவர் நான் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளால் தான் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அதற்காக சில மருத்துவர்களையும் சந்தித்து இருக்கிறார்கள். மருத்துவரும் டி.என்.சி. செய்திருக்கிறார். ஆனால் பிரச்சினை சிறுநீரகத்தில் தான் இருந்திருக்கிறது என்று யாரும் அறியவில்லை. நான் பரிசோதனை செய்து சிறுநீரகம் செயலிழந்து இருப்பதை சொன்னபோது அவர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன செய்வது? எப்படியோ ஏமாந்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு தைரியம் சொல்லி சிகிச்சை அளித்தேன்.

    ஒரு பெண் கருத்தரித்து இருக்கிறாரா என்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க மிக சுலபமான பரிசோதனை முறைகள் எல்லாம் இப்போது வந்து விட்டது. ஆனால் அந்த காலத்தில் அப்படி எதுவும் இல்லை. மனமுடித்து கொடுக்கப்பட்ட இளம்பெண் திடீரென்று வாந்தி எடுப்பதை பார்த்தாலும் அதை தொடர்ந்து மாதவிலக்கு நின்று விட்டாலும் இது கருத்தரித்ததற்கான அடையாளம் தான் என்று சந்தோசப்படுவார்கள். அப்படி தான் ஒரு செல்வந்தர் வீட்டு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த பெண்ணுக்கு திடீரென்று மாதவிலக்கு நின்று போனது. அடிக்கடி வாந்தியும் எடுத்திருக்கிறார். அதை பார்த்ததும்மொத்த குடும்பமும் குதூகலம் அடைந்து விட்டது. அந்த பெண்ணுக்கு வளைகாப்பு எப்படி நடத்துவது என்பது பற்றியெல்லாம் திட்டம் போட தொடங்கிவிட்டார்கள்.

    ஆனால் மாதவிலக்கு நின்றது அந்த பெண்ணின் சிறுநீரகம் செயலிழந்ததால் என்பதை நான் கண்டுபிடித்தேன். அதைக்கேட்டதும் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியை தொலைத்து அதிர்ச்சியில் உறைந்து போனது. அதன்பிறகு டயாலிசிஸ் செய்து தான் அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தது. பெண்கள் மட்டும் தான் என்பதல்ல ஆண்களும் கூட இப்படி ஏமாந்து போக வாய்ப்புகள் உண்டு. ஏமாந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

    இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் சென்று உயர் படிப்பெல்லாம் படித்து வந்தார். நாடு திரும்பிய அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். முதல் மனைவியின் மூலம் குழந்தை பிறக்கவில்லை. உடனே இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இரண்டாவது திருமணம் செய்த பிறகும் குழந்தை உண்டாகவில்லை.

    அதைத்தொடர்ந்து 3-வது திருமணத்திற்கும் ஏற்பாடு நடந்து கொண்டு இருந்த நேரத்தில் தான் சிகிச்சைக்கு வந்தார்கள். அவருக்கு ஆண்மைக் குறைவு என்று சர்வ சாதாரணமாக நினைத்து இருந்தார்கள். ஆண்மைக் குறைவுக்கு சிகிச்சை எடுத்தால் போதும் குழந்தை பிறந்துவிடும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் பரிசோதித்த பிறகு தான் தெரிந்தது அவரது ஆண்மை குறைவுக்கு காரணம் அவரது சிறுநீரகம் செயலிழந்து போனது என்பது தான். ஆண்மைக்குறைபாடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதல் சிறுநீரக செய லிழப்பு ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.

    இன்னொரு நோயளி வாந்தி எடுத்திருக்கிறார், ரத்தபோக்கும் நிறக்விலைல் மருத்துவரை சந்தித்து இருக்கிறார். பரிசோதனையில் அஜீரணம் இருக்கிறது. இது குடல் பிரச்சினைதான் வயிற்றுப்புண்ணுக்கு சிக்ச்சை அளித்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போலவே மருத்துவர்களும் எண்டோஸ்கோப்பில் பார்த்து குடலில் புண் இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு சிகிச்சையும் அளித்து இருக்கிறார்கள். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை.

    அதன்பிறகு என்னிடம் வந்தார்கள். நான் சில பரிசோதனைகளை செய்தேன். அப்போது ரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகம் இருந்ததை பார்த்தேன். இது சிறுநீரக பிரச்சினை அல்லவா என்பதை கருத்தில் கொண்டு தொடர் பரிசோதனைகள் செய்த போது அவருக்கும் சிறுநீரகம் செயலிழந்து போய் இருப்பது தெரியவந்தது.

    இதேபோல் 50-55 வயதை கடந்தவர்கள் மலச்சிக்கல் ஏற்பட்டாலோ, மலத்துடன் வலியில்லாமல் ரத்தம் வெளிப்பட்டாலோ, ஒன்று மூலநோயாக இருக்கும் அல்லது புற்றுநோயாக இருக்கும் என்று நினைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட அறிகுறியோடும் ஒரு நோயாளி என்னை வந்து சந்தித்தார்.

    அவருக்கும் கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்தது சிறுநீரகம் செயலிழந்து இருப்பதை உறுதி படுத்தி அதற்கான சிகிச்சைகளை அளித்தேன். கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர்களை வைத்து மாணவர்கள் கலாய்ப்பது உண்டு. காரணம் இல்லாமலேயே பட்டப்பெயரை சூட்டும் போது ஏதாவது காரணம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா, அப்படி ஒரு ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது அடிக்கடி உடலில் அரிப்பு ஏற்பட்டு சொரிந்து கொண்டு இருந்திருக்கிறார். மாணவர்கள் அவரை சொரி வாத்தியார் என்று பெயர் வைத்துவிட்டார். இது தோல் பிரச்சினை தான் என்று கருதிய அவரும் பிரபலமான தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அரிப்பு நிற்கவில்லை.

    சிறுநீரகம் என்பது அவரை பொறுத்தவரை சம்பந்தமில்லாத துறை. இருந்தாலும் சிறுநீரக சிறப்பு டாக்டராக இருந்தாலும் இவரிடமும் ஒரு ஆலோசனை கேட்போமே என்று அந்த ஆசிரியர் என்னிடம் வந்தார். அவருக்கு நான் பரிசோதனை செய்த போது கிரியேட்டின் அளவு மிக அதிகமாக இருந்தது தெரியவந்தது.

    அப்போது தான் அவரிடம் சொன்னேன். உங்களுக்கு வந்தது தோல்வியாதி அல்ல. சிறுநீரக செயலிழப்பு என்றேன். யூரியா கிரியேட்டின் அதிகமாகும் போது அது சிறுநீர் வழியே வெளியேற முடியாமல் தோல் மூலமாக வெளியேறும். இதனால் தான் தோலில் அரிப்பு ஏற்படும். அப்படி தான் அவருக்கும் தாங்க முடியாத அரிப்பு தொல்லை ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் சிறுநீரக சிகிச்சைக்கு வந்த அவர் மனம் வெறுத்து தற்கொலையே செய்து கொண்டார் என்பது வருத்ததிற்குரியது.

    சரும பராமரிப்பில் பெண்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அப்படி இருக்கும் போது செக்கச்செவேல் என்று இருந்த முகம் கருப்பாக மாறினால் பெண்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? அப்படி தான் முகம் கருத்து போனதால் வெறுத்துப்போன பெண்மணி ஒருவர் பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தார்.

    அவரது முகத்தை பார்த்தே இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நான் யூகித்து விட்டேன். சிறுநீரக பாதிப்பு தொடர்பான அறிகுறிகளில் முகம் வெளுத்து போவதும் உண்டு. இதை முகத்தை பார்த்தே முடிவு செய்ய முடியும். அது மருத்துவர்களின் அனுபத்தாலும், பல நோயாளிகளை பரிசோதிப்பதின் மூலமும் கிடைக்கும். அனுபவ அறிவாலும் தான் முடியும். பொதுவாக முகம் வெளிரிப்போகிறது என்றால் ரத்த குறைபாடு அல்லது ரத்த சோகை என்றுதான் சொல்வார்கள்.

    ஆனால் இந்த மாதிரி மாறிப்போன முகங்களில் வெளிர் நிறத்துடன் லேசான தவிட்டு கலர் (பிரவுனிஸ்) கலந்து தெரியும். அதை பார்த்து இது சிறுநீரக பிரச்சினையின் வெளிப்பாடு என்று முடிவு செய்து விடுவோம்.

    சிலருக்கு சிவப்பாக இருந்த சருமம் கருப்பாக மாறும். ஏற்கனவே கருப்பாக இருந்த சருமம் அண்டங்கருப்பாக மாறும். இது ஒருவர் முகத்தில் மட்டுமல்ல உடலில் எந்த இடத்திலும் வரலாம். உடல் முழுவதும் இந்த மாற்றம் வரலாம்.

    அதேபோல் தான் ஒரு முறை தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் நான் பணியில் இருந்தேன். அப்போது வேறு ஒரு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி வயிற்றுவலியாலும், வாந்தியாலும் அவதிப்பட்டு இருக்கிறார். அப்போது என்னிடம் ஒரு ஆலோசனை கேட்பதற்காக அழைத்தார்கள். நான் அந்த வார்டுக்கு சென்ற போது ஹவுஸ் சர்ஜனாக பணியில் இருந்த மருத்துவ மாணவி ஒருவர் அந்த நோயாளிக்கான பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே அவரது கால் நகத்தை பார்த்து இவருக்கு சீறுநீரக பிரச்சினை இருக்கலாம் என்று பரிந்துரை சீட்டில் எழுதி வைத்திருந்தார்.

    அங்கு சென்ற நான் அந்த சீட்டையும் பார்த்து விட்டு நோயாளியின் நகத்தையும் பார்த்தேன் பாதி நகம் வெண்மை நிறத்திலும், மீதி பாதி நகம் பிரவுனிஸ் நிறத்திலும் இருந்தது. அனுபவம் வாய்ந்த டாக்டர் என்ற முறையில் என்னால் அவருக்கு சிறுநீரகம் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அந்த நகத்தை வைத்தே உறுதி செய்ய முடிந்தது.

    ஆனால் அந்த இளம் பெண் டாக்டர் எப்படி உறுதி செய்தார் என்பதற்காக அவரிடம் கேட்டேன். டாக்டர் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அதற்குள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்றேன்.

    அதற்கு அந்த மாணவி சொன்னார் '3 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தான் எங்களுக்கு பாடம் நடத்தினீர்கள். அதில் இந்த அறிகுறியும் ஒன்று. அதை வைத்து தான் நான் அவரது கால் நகங்களை தொட்டு பார்த்து இந்த முடிவுக்கு வந்தேன்' என்றார். அதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல மருத்துவ மாணவி உருவாகி இருக்கிறார். அதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை கேட்டபோது மிகுந்த சந்தோசப்பட்டேன். அதன் பிறகு பரிசோதனை முடிவுகள் வந்ததும் உண்மையிலேயே அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது உறுதியானது.

    பொதுவாக மருத்துவ அறிவு என்பது பரிசோதனைகள், கருவிகள் மூலம் கிடைப்பதை விட நோயாளியின் அருகில் இருந்து அவர்களின் உடலை தொட்டு பரிசோதிப்பதின் மூலம் கிடைக்கும் அறிவு தான் மகத்தானது. அதன் மூலம் எவ்வளவோ நோய்களை கண்டுபிடிக்க முடியும்.

    இதயமே... இதயமே...

    இதயம் லப் டப், லப் டப் என்று இடைவிடாமல் துடித்துக்கொண்டு இருப்பதால் எல்லோருக்கும் அதன் மீது அக்கறை அதிகம். ஆனால் அந்த அளவுக்கு கிட்னியின் மீது அக்கறை காட்டுவதில்லை. காரணம் கிட்னி அமைதியாக செயல்படுகிறது. அது இயங்கி கொண்டு இருப்பதை வெளியே உணர்த்துவதில்லை. அதனால் தான் அதை பலரும் கண்டுகொள்வதில்லை. அதை விட முக்கியமாக மருத்தவ துறையில் கூட சிறுநீரக துறையை விட இதயவியல் துறையில் தான் அதிகமான மருத்துவர்கள் இருப்பார்கள்.

    இதயநோய் நிபுணர்கள் மிக முக்கிய பிரமுகர்களின் இதயங்களோடு நெருங்கி இருப்பார்கள். அதனால் தான் துணை வேந்தர்களாக கூட இதயவியல் நிபுணர்கள்தான் அதிகமாக வருகிறார்கள் என்றுகூட சொல்வதுண்டு.

    (தொடரும்...)

    Next Story
    ×