என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாள் இன்று...
    X

    முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாள் இன்று...

    • குடும்பநலனை விட தேசநலமே முக்கியம் என்று கருதி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • பிரதமராக இருந்தபோது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார்.

    இன்று (பிப்ரவரி 29-ந்தேதி) முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் பிறந்தநாள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவர். நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் என்ற விருதை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

    சுதந்திர போராட்ட வீரரான மொரார்ஜிதேசாய் 1896-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி குஜராத் மாநிலம் குல்தார் மாவட்டத்தில் படேலி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது பிறந்தநாள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும். பிப்ரவரி 29-ந்தேதியே (லீப் வருடம்) அதற்கு காரணம். தனது 99 ஆண்டுகால வாழ்க்கையில் 25 முறைதான் அவர் பிறந்தநாள் கொண்டாடினார் என்பது விசித்திரமான உண்மை.

    மும்பையில் பட்டப்படிப்பு முடித்த மொரார்ஜி தேசாய் 'சிவில்சர்வீஸ்' தேர்வில் வெற்றி பெற்று 12 ஆண்டுகள் மும்பை மாகாணத்தில் உதவி கலெக்டராக பதவி வகித்தார். 1930-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்த காலத்தில் காந்தியடிகளின் அழைப்பை ஏற்று அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். குடும்பநலனை விட தேசநலமே முக்கியம் என்று கருதி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

    'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது கைதாகி 5 ஆண்டுகள் சிறையில் கழித்தார். 1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்தார். 1937-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பம்பாய் மாகாண தேர்தலில் போட்டியிட்டது. இதில் மொரார்ஜிதேசாய் வெற்றிபெற்று விவசாயம் மற்றும் கூட்டுறவு வருவாய் துறை மந்திரியாக பதவியேற்றார். 1946-ம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மொரார்ஜி தேசாய் உள்துறை மந்திரி ஆனார். இந்தியா விடுதலை அடைந்தபிறகு 1952-ம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் முதல்-மந்திரி ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    பம்பாய் மாகாணம், மராட்டியம், குஜராத் என்று 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு மொரார்ஜி எதிர்ப்பு தெரிவித்து முதல்-மந்திரி பதவியை விட்டுவிலகினார்.

    1958-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரி ஆனார். 1963-ம் ஆண்டு காமராஜர் திட்டத்தின்கீழ் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி காமராஜர் தமிழக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறினார். தேசாயும் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 1969-ல் மொரார்ஜி ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்தார். 1975-ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனபடுத்தியபோது மொரார்ஜி கைது செய்யப்பட்டு ரகசிய காவலில் வைக்கப்பட்டார். 19 மாதம் சிறைத்தண்டனைக்கு பிறகு 1977 ஜனவரி மாதம் விடுதலையானார்.

    அதே ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையில் ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றது. தேசாய் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி இந்திய பிரதமராக பதவி ஏற்றார்.

    பிரதமராக இருந்தபோது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தார். கதர் மற்றும் கைத்தறி தொழிலுக்கு மறுவாழ்வு கொடுத்தார். ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

    மொரார்ஜிதேசாய் நேர்மைக்கும் உண்மைக்கும் உதாரணமாக திகழ்ந்தவர். அவர் பம்பாய் மாநிலத்தில் மந்திரியாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. மொரார்ஜிதேசாய் மகள் மருத்துவக்கல்லூரியில் படித்துவந்தார். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து விட்டார். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் தேசாய் அதற்கு மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்டிவிட்டார் என்ற பழிச்சொல் வந்துவிடும் என்பதே அதற்குகாரணம். இதன்விளைவாக அவரது மகள் தற்கொலை செய்துகொண்டாள். தனது மகளின் இழப்பை மவுனமாக தாங்கிகொண்டார்.

    ஜனதா சாப்பாடு திட்டம் என்ற சாப்பாட்டு திட்டம் தேசாய் பிரதமராக இருக்கும்போது கொண்டுவரப்பட்டது. உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். இதுதான் ஜனதா சாப்பாடு.

    இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஓட்டல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    வரதட்சணையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில் மொரார்ஜி தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். தான் கலந்துகொள்ளும் திருமண விழாவில் அது தலைகாட்டியது என்று கேள்விப்பட்டால் உடனே வெளியேறி விடுவார்.

    ஒரு முறை ராமேசுவரம் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்தபோது சாமி தரிசனத்துக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி வரிசையில் நின்று வழிபட்டார்.

    பிரதமராக இருந்த மொரார்ஜிதேசாய் இறுதிகாலத்தில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்துவந்தார். வீட்டு உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் தேசாய் குடும்பம் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிர்ச்சியிலும், அவமானத்திலும் உடைந்துபோன தேசாயின் மருமகள் மனநிலை பாதிக்கப்பட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார்.

    மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனதும் அவரது ஆதரவாளர்கள் இந்திராகாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் தேசாயோ ''தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மக்கள் ஏற்கனவே இந்திராவை தண்டித்து விட்டார்கள். வேறு தண்டனை தேவை இல்லை'' என்று கூறிவிட்டார். நீண்ட ஆயுளுக்கு சிறுநீரைக் குடிப்பதே காரணம் என்று இவர் கூறியது பலரால் விமர்சிக்கப்பட்டது.

    நெஞ்சில் உரத்துடனும், நேர்மைதிறத்துடனும் செயல்பட்டு வாழ்நாள் எல்லாம் மக்கள்சேவை செய்த மொரார்ஜிதேசாய் 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது 99-வது வயதில் மறைந்தார்.

    மொரார்ஜிதேசாய் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி மத்தியஅரசு அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

    Next Story
    ×