search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோபம் என்பது வீரமா? பலவீனமா?- கவிஞர் தியாரூ
    X

    கோபம் என்பது வீரமா? பலவீனமா?- கவிஞர் தியாரூ

    • ஒருவர் மீது ஒருவருக்குக் கோபம் ஏற்படக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போவதுதான்.
    • சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவன் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவன் சொர்க்கவாசி.

    நமக்குக் கோபம் அவசியமா. ஏன் கோபம் வருகிறது. யாரிடத்தில் கோபப்படுகிறோம். கோபத்தினால் நமக்குப் பயனுண்டா... இப்படி கோபத்தைப் பற்றிய பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

    மிருகங்கள் நம் மீது கோபப்படுவதில்லை. ஆனால், அவற்றைச் சீண்டினால் நம்மைத் தாக்க வரும். நாயைத் தடவிக் கொடுத்தால் அது வாலாட்டிக் குழையும். நாம் கல்லெடுத்து எறிந்தால் நம்மைக் கடிக்க வரும். சிற்றெறும்புகளுக்கும் கோபம் வரும், நாம் அவற்றை மிதித்துவிட்டால்.

    நம்மையும் சிலர் அப்படிதான் சீண்டிப் பார்ப்பார்கள். நம்மைக் கோபப்படுத்தி, பின்னர் குற்றப்படுத்துவதில் அவர்களுக்கு அப்படியொரு பிரியம். அதற்கென்றே திட்டமிட்டுத் திரிபவர்கள் உண்டு. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தார், பொது இடங்களில் பார்க்கின்ற மனிதர்கள் என பலதரப்பட்ட மக்களிடையே அப்படிப்பட்டவர்களையும் நாம் பார்க்க முடியும்.

    வேண்டுமென்றே வம்புக்கிழுப்பார்கள். தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவார்கள். உங்களை ஆத்திரமூட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். மொத்தத்தில் உங்கள் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதுதான் அவர்களின் நோக்கம். விஷப்பாம்புகளைக் கண்டால் எப்படி துரிதமாக விலகிச் செல்கிறோமோ, அதேபோல் அவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான் உத்தமம்.

    சில சந்தர்ப்பங்களில் விலகிச் செல்ல முடிவதில்லை. அத்தருணங்களில் ஞானமாகப் பேசுவதும், புத்திசாலித்தனமாக அவர்களை மேற்கொள்வதும் மிக முக்கியம். இல்லையெனில், உங்கள் கோபத்தைக் கொண்டே உங்களை அழிவுக்கு உட்படுத்திவிடுவார்கள். அதனால்தான், 'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' என்றான் வள்ளுவன்.

    இந்த உலகில் நல்லபடியாய் நாம் வாழ்வதற்குச் சில தகுதிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, 'கோபத்தை அடக்கி ஆளும் திறன்' மற்றும் 'நியாயமான கோபத்தை நேர்மையாக வெளிப்படுத்தும் ஆற்றல்'.

    தவறான நடத்தையைத் திருத்த - சமூக நீதியைப் பாதுகாக்க - எதிர்மறை உணர்வுகளை நீக்க - தன்மானத்தைக் காத்துக் கொள்ள உதவக்கூடிய கோபம் நியாயமானதுதான். ஆனால், அதுவே சரியான வடிகால் இல்லாவிடில் அழிவைத் தந்துவிடும்.

    கண்மூடித்தனமான கோபம் ஆபத்தானது. எத்தனையோ பேருடைய வாழ்க்கை அவர்களுடைய கோபத்தினால் அழிந்த கதைகள் உண்டு. சிறைச்சாலைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அப்படி வந்தவர்கள்தான். பேசித் தீர்க்க வேண்டிய சாதாரணமான விஷயங்களை, கோபம் பூதாகரமாக்கிவிடும். நிலைமையைத் தாறுமாறாக்குவது கோபம்தானே.

    ஒரு ஜென் குருவை, படைத்தளபதி ஒருவன் பார்க்க வந்தான்.

    குருவை பணிவுடன் வணங்கினான். பின்னர் அவரைப் பார்த்து, 'சொர்க்கம் நரகம் என இருவேறு இடங்கள் உண்டா?' என்று கேட்டான்.

    'நீ யார்?' என்று கேட்டார் குரு.

    'நான் ஒரு சமுராய்' என்று மிடுக்குடன் பதிலளித்தான் அந்தப் படைத்தளபதி. 'சமுராய்' என்பது ஜப்பானில் வீரப் பரம்பரையைக் குறிப்பது.

    கம்பீரமாய் நின்ற அவனிடம், 'சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?' என்றார் குரு.

    அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. 'சமுராய்' என்று சொன்ன பிறகும் இப்படிக் கேட்டு அவமானப்படுத்திவிட்டாரே என்ற ஆத்திரத்தில் கொதித்தான்.

    உரக்கச் சிரித்தார் குரு.

    ஒன்றும் புரியாமல் படைத்தளபதி திகைத்தான்.

    'நீ கசாப்புக் கடைக்காரன்போல் தெரிகிறாயே. உன்னை எவன் தளபதியாக நியமித்தான்?' என்றார் குரு.

    படைத்தளபதிக்கு உச்சந்தலைமேல் கோபம் ஏறியது. சட்டென்று தன் உடைவாளை உருவினான்.

    'இப்போதே உங்கள் தலையைக் கொய்துவிடப் போகிறேன்' என்று கர்ஜித்தபடி வாளை ஓங்கினான்.

    'இதோ, இதுதான் நரக வாசல்' என்று நிதானமாகச் சொன்னார் குரு.

    அவன் புரிந்து கொண்டான். பனிபோல் கோபம் மறைந்தது. தலை தாழ்த்தி குருவை வணங்கினான்.

    'என்னை மன்னியுங்கள் குருவே' என்று பணிந்து கூறி, உடைவாளை உறையில் போட்டான்.

    'இதுதான் சொர்க்க வாசல்' என்றார் குரு.

    சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவன் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவன் சொர்க்கவாசி.

    சிலர் அடிக்கடி கோபப்படுவார்கள். யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவார்கள். அவர்கள் இருக்கும் இடம் நரகத்தைப் போலிருக்கும். அவர்களை யாரும் விரும்பமாட்டார்கள்; நெருங்கிச் செல்ல யோசிப்பார்கள். ஏனெனில், எதற்கெடுத்தாலும் கோபப்படுகின்றவர்கள், எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.

    சாலையில் தங்கள் வாகனத்தை வேறு யாராவது முந்திவிட்டால் சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. விரட்டிச் சென்று அவர்களை முந்தப் பார்ப்பார்கள். பார்த்துப் பார்த்து முறைப்பார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுவார்கள். இது போன்ற சம்பவங்களை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.

    சாப்பாட்டில் உப்பு குறைந்துவிட்டால் தட்டோடு தூக்கி வீசுகின்ற ஆண்கள்; பண்டிகைக்குப் பட்டுப் புடவை வாங்கித் தரவில்லை என்று கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டிற்குச் செல்லும் பெண்கள்; கைச்செலவுக்குப் பணம் தராத தந்தையை ஜென்மப் பகையாகப் பார்க்கும் பிள்ளைகள்; மாமியாரை வசைபாடும் மருமகள்கள்; அண்ணன் தம்பி வழக்குகள் - இப்படி ஒரு குடும்பத்திற்குள்ளேயே எத்தனை கோபதாபங்கள்!

    ஒருவர் மீது ஒருவருக்குக் கோபம் ஏற்படக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போவதுதான். அதை உடனே அவர்களிடத்தில் சாமர்த்தியமாகப் புரிய வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும். அப்படிச் செய்யாமல், மனதிற்குள்ளேயே போட்டு அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால், அது ஒருநாள் வெடித்துச் சிதறிவிடும்.

    யாரையும் காயப்படுத்தாமல் எதையும் நாகரிகமாகப் பேசி நல்ல இணக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சிலருக்குப் பேசவே தெரிவதில்லை. உள்ளதைத்தானே சொல்கிறேன் என்று முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுவார்கள். அது கோபத்தை அதிகமாக்கி மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

    உறவுகளில் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கும், தேவையற்ற பிணக்குகளுக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுதானே காரணம். ஒரு சிறு தீக்குச்சியின் நெருப்பு மிகப்பெரிய காட்டையே சாம்பலாக்கிவிடும். அதைப் போன்றதுதான் கோபத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தை.

    கொலைகளும்கூட நிகழ்ந்துவிடுவதுண்டு. பலரின் வாழ்வில் கோபத்தினால் எத்தனை எத்தனை இழப்புகள்!

    மூவேந்தர் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவர்களில் யாருக்குமே பெண் கொடுக்க பாரி சம்மதிக்கவில்லை. எனவே, மூவேந்தரும் ஓரணியாக இணைந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அத்தோடு விட்டிருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

    ஆனால், மூவேந்தரையும் நோக்கிக் கபிலர் பாடிய பாடல்தான் அவர்களுக்குள் கோபத்தை அதிகப்படுத்தியது. அப்பாடல், புறநானூற்றில் நூற்றொன்பதாவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

    'அளிதோதானே பாரியது பறம்பே-

    நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்...' என்று தொடங்கும் அப்பாடலில் கபிலர் கூறுவது இதுதான்:

    'பாரியின் பறம்பு மலை, நாடி வருவோர்க்கு இரங்கத்தக்கது. ஆனால், மூவேந்தர்களாகிய நீங்கள் ஒன்று கூடி முற்றுகை இட்டாலும், பறம்பு மலையை உங்களால் கைப்பற்ற முடியாது. வாள் கொண்டு செய்யும் போருக்குப் பயந்து, தனது பறம்பு மலையை பாரி தந்துவிடமாட்டான். முற்றுகையின் காலத்தை நீட்டித்து, எங்கள் மக்களையும் வீரர்களையும் நலிவடையச் செய்து கைப்பற்றிவிடலாம் என்றும் எண்ண வேண்டாம். ஏனெனில், உழவர்கள் உழாமலேயே பறம்பு மலை நான்கு வகையான வளங்களை உடையது. எனவே, எக்காலத்திலேயும் பறம்பில் பஞ்சம் இல்லை. நீர் வளத்துக்கும் குறைவே இல்லை. உங்கள் வாள் வலிமைக்குப் பயந்து அவன் தன் மலையை ஒருபோதும் உங்களுக்குத் தாரை வார்க்க மாட்டான்'.

    இப்படியெல்லாம் பேசிய கபிலர், கிண்டலாக மூவேந்தரிடம் இன்னொன்றையும் சொல்கிறார்.

    'பறம்பு மலையை நீங்கள் பெறுவதற்கு ஒரே ஒரு வழி உண்டு. அது என்னவெனில், வடித்து முறுக்கப்பட்ட சிறிய யாழினைப் பண்ணிக் கொண்டு, நறுமணம் கொண்ட கூந்தலை உடைய உங்கள் விரலிகள் பின்னே வர, இரவலராய் ஆடியும் பாடியும் நீங்கள் வருவீர்களானால், கலைக்குத் தானமாக பறம்பு நாட்டையும், பறம்பு மலையையும் உங்களுக்குத் தருவான். எனினும், ஏற்கனவே பல கலைஞர்கள் வந்து ஆடிப் பாடி பறம்பு நாட்டின் முந்நூறு ஊர்களையும் பரிசாகப் பெற்றுச் சென்றுவிட்டார்கள். எனவே, பறம்பு மலையோடு நானும் பாரியும்தான் மிச்சம். தாமதம் பண்ணிவிட்டீர்களே' என்று பரிதாபப்படுவதுபோல் கபிலர் சொன்ன வார்த்தைகள்தான் மூவேந்தரை மூர்க்க வெறி கொள்ளச் செய்தது.

    விளைவு? பாரி கொல்லப்பட்டான். அவன் மகளிர் அனாதைகளாயினர்.

    இருவருக்கிடையே பிரச்சினை வருகின்ற போது, இன்னொருவர் பேசும் வார்த்தைகள் அந்தப் பிரச்சினையை நீக்குவதாக இருந்தால் நல்லது. கோபப்படுவது எப்படி குற்றமோ, அதைவிட பெரிய குற்றம் கோபமூட்டுவது. எனவே, நாம் கோபப்படுகிறோமோ இல்லையோ, கோபமூட்டாமலிருக்கத் தெரிய வேண்டும்.

    பலதரப்பட்ட நண்பர்கள், கருத்தொற்றுமை இல்லாத உடன்பணியாளர்கள், சுயநலமான சொந்தங்கள், புரிந்தவர்கள், புரியாதவர்கள் - இப்படி விதவிதமான மனிதர்களிடையில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. முரண்பாடுகள் வரலாம். அதில் தவறில்லை. மோதல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். நாம் பலியாகிவிடக் கூடாது.

    ஆனால், கோபமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? முடியாதுதான். ஏனெனில், உணர்வுகளால் ஆனது வாழ்க்கை. கோபமும் ஒருவகையான உணர்வுதானே. நமக்கு யாராவது அநியாயமோ துரோகமோ செய்துவிட்டால், அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அது முற்றும் போது கோபமாக உருவெடுக்கிறது. எனினும், கோபத்தைக் கையாள நாம் பழகிக் கொள்ள வேண்டும். எப்படி? அதற்குச் சில எளிய வழிமுறைகள்:

    கோபம் என்பது, நம் புத்தி செயல்படுவதற்கு முன்பே ஆழ்மனத்தில் இருந்து வரும் ஓர் உணர்வு. அதனால், கோபம் ஏற்படும் சூழ்நிலை வரும்போது ஒரு 5 நிமிடம் தியானம் செய்தால் போதும். புத்தி விழித்துக் கொள்ளும். கோபம் மாயமாகிவிடும்.

    கோபம் எழும் வேளையில் நாம் சுய உணர்வை இழந்துவிடக் கூடாது. 'கோபம் வந்தாலும் ஆத்திரப்பட்டு யாரிடமும் எதையும் பேசிவிடக் கூடாது' என்னும் உறுதிப்பாடு மனதில் வேண்டும்.

    கோபம் வரும்போது எளிதாக சுவாசப் பயிற்சி செய்யலாம். ஒன்றுமுதல் ஆறுவரை எண்ணியபடி, மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர் அதேபோல், ஒன்றுமுதல் ஏழுவரை எண்ணிக்கொண்டு மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, ஒன்றுமுதல் எட்டுவரை எண்ணிக்கொண்டு, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்தால் போதும். கோபம் மட்டுமன்றி, பதற்றமும் பயமும்கூட பறந்துவிடும்.

    சிலருக்குக் கோபம் வந்துவிட்டால், இதயத்துடிப்பு அதிகமாகும்; நகங்களைக் கடித்திழுப்பார்கள்; பற்களை நறநற என்று கடிப்பார்கள்; கைகளைப் பிசைவார்கள். நீங்களும் அப்படியெனில், உங்கள் மனதை உடனடியாக அமைதிப்படுத்துங்கள். நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யுங்கள். இனிமையான இசையைக் கேளுங்கள். புத்தகத்தை வாசியுங்கள். உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்; தசைகள் நிதானமாகும்.

    கோபப்படும்போது நூற்றுக்கணக்கான நரம்புகள் செயல்படுகின்றன. அதிகப்படியான கோபத்தில் நரம்புகள் விரைவில் செயல் இழந்துவிடுகின்றன. கோபம் மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    மூளையைப் பாதிக்கும் பக்கவாதத்துக்குக்கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் நம்மை அழிப்பதற்குள் நாம் அதை அழித்துவிட வேண்டும். சினம் கொண்டவன் தன் மன நிம்மதியை இழக்கிறான். அவனுடைய மனைவி பிள்ளைகளும்கூட அவனுடன் பேச அஞ்சுகிறார்கள். அத்தகைய பொல்லாத கோபம் நமக்குத் தேவைதானா! கோபம் என்பது வீரம் அல்ல; அது நம் பலவீனத்தின் வெளிப்பாடு. எனவே, கோபத்தைத் தவிர்ப்போம்; குற்றங்களைத் தடுப்போம். அன்பின் வழியில் வாழ்வை வளப்படுத்துவோம்.

    Next Story
    ×