என் மலர்
புதுச்சேரி

ஜோசப்
இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த வாலிபர்- பேச மறுத்ததால் ஆத்திரம்
- ஜோசப் தனது நண்பருடன் சர்மிளாவை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
- ஜோசப் மற்றும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப் (36) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜோசப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இந்நிலையில் ஜோசப்பின் பழக்க வழக்கம் சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோசப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் வேலை செய்யும் ஜவுளி கடைக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சர்மிளா பெரிய கடை, ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், ஜோசப்பை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சர்மிளா வேலையை முடித்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே வந்த போது ஜோசப் தனது நண்பருடன் சர்மிளாவை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பெண் அவரிடம் பேசாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்த அந்த பெண் வலி தாங்க முடியால் அலறியபடி ஓடினார். இதனை பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர். ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜோசப் மற்றும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
ஜோசப்புக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டதால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






