என் மலர்
புதுச்சேரி

வேறொரு பெண்ணுடன் திருமணம்: காதலி போலீசில் புகார் செய்ததால் புதுமாப்பிள்ளை தலைமறைவு
- கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட பெண் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அடுத்த கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் நரம்பை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபர் மாதம் புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மணிகண்டன் அந்த பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாக்குறுதி அளித்து உள்ளார். இதையடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதன்பிறகு இவர்கள் அடிக்கடி பல முறை தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மணிகண்டன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இருவரும் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மணிகண்டன் அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் எவ்வளவு பவுன் நகை போடுவார்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய மணிகண்டனிடம் பாதிக்கப்பட்ட பெண் பேச முயற்சித்துள்ளார். அவர் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.
கடந்த திங்கட்கிழமை அன்று மணிகண்டனுக்கும் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இன்று அவர்களுக்கு நரம்பை கோவிலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரில் தன்னை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து விட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணிகண்டன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் இன்று நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சி நின்றுபோனது. இச்சம்பவம் நரம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






