என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட்- ஒரே மாதத்தில் 10,600 பேருக்கு அபராதம்: ரூ.14 லட்சம் வசூல்
- போக்குவரத்து போலீஸ் சார்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. குறிப்பாக ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர்.
இந்தநிலையில் விபத்து உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி புதுவை அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக புதுச்சேரியில் கடந்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. மேலும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சார்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 12 முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை (ஒரு மாதம்) புதுச்சேரியில் உள்ள 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் (கிழக்கு, மேற்குவடக்கு, தெற்கு) நிலைய அதிகாரிகள் தலைமையில் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்களிலும் சேர்த்து 10,592 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.






