என் மலர்
இந்தியா

திருமணத்திற்கு மறுத்த காதலியின் கழுத்து அறுப்பு- வாலிபருக்கு வலைவீச்சு
- சீனிவாசன் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி வந்தார்.
- இளம்பெண்ணை மீட்டு வாரங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், காசிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). பட்டதாரி வாலிபரான இவர் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் சீனிவாசனின் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சீனிவாசனுடன் பேசக்கூடாது. பழகக் கூடாது என தடை விதித்தனர்.
இந்த நிலையில் சீனிவாசன் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி வந்தார். வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என இளம்பெண் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சீனிவாசன் திருமணம் செய்தே ஆக வேண்டும் என இளம்பெண்ணை வற்புறுத்தினார்.
திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் இரவு காதலியின் வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார்.
இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சீனிவாசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இளம்பெண்ணை மீட்டு வாரங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் கழுத்தை வாலிபர் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






