என் மலர்tooltip icon

    இந்தியா

    பண்ணை வீட்டில் போதை விருந்து: ஆந்திரா எம்.பி., தெலுங்கானா முன்னாள் எம்.எல்.ஏ. சிக்கினர்
    X

    பண்ணை வீட்டில் போதை விருந்து: ஆந்திரா எம்.பி., தெலுங்கானா முன்னாள் எம்.எல்.ஏ. சிக்கினர்

    • போதைப் பொருள் விருந்து நடைபெற்ற பண்ணை வீட்டிற்கு போலீசார் விரைந்தனர்.
    • போலீசார் வருவதை அறிந்து துப்பாக்கில் ஒருவர் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், மைனா பாத் அஜீஸ் நகரை சேர்ந்தவர் பைலட் ரோஹித் ரெட்டி. இவரது பண்ணை வீட்டில் வார இறுதி விடுமுறை நாள் மது மற்றும் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சட்ட விரோதமாக இந்த விருந்து செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. நேற்று இரவு மது மற்றும் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரவு 9 மணிக்கு பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீசார் பண்ணை வீட்டிற்குள் வருவதை கண்ட டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மிஸ்ரா என்பவர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். துப்பாக்கி சூட்டில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து விருந்தில் கலந்து கொண்ட பைலட் ரோஹித் ரெட்டி, ஏலூரு எம்.பி. மகேஷ் குமார் யாதவ், மிஸ்ரா, ரமேஷ் குமார், விஜய் கிருஷ்ணா, ரித்தேஷ் ரெட்டி, காசிக் ரவி, அர்ஜுன் ரெட்டி மற்றும் ஒரு பெண் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் போலீசார் பரிசோதனை செய்தபோது மிஸ்ரா, ரோஹித் ரெட்டி, ரித்தேஷ், காசிக் ரவி, அர்ஜுன் ரெட்டி ஆகியோர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிம்லா மற்றும் கோவாவில் இருந்து வரும்போது போதைப்பொருள் உட்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    பண்ணை வீட்டில் 2 கிராம் எடையுள்ள வெள்ளை பொடியை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போதைப்பொருளா? என்பதை அறிவதற்காக அந்த வெள்ளைபொடியை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மது மற்றும் போதை விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசியல்வாதிகள் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×