என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் நோயாளி காலை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் அவலம்
    X

    ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் நோயாளி காலை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் அவலம்

    • வாலிபர் ஒருவரை அவரது பெற்றோர் நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையாக அழைத்து வந்தனர்.
    • சக்கர நாற்காலி கிடைக்காததால் அவரது பெற்றோர் மகனின் 2 கால்களையும் பிடித்து தரதரவென லிப்ட்டுக்கு இழுத்து சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை அவரது பெற்றோர் நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையாக அழைத்து வந்தனர்.

    அதிக அளவில் மது குடித்து இருந்ததால் வாலிபரால் நடக்க முடியவில்லை. இரவு முழுவதும் நோயாளிகள் தங்கும் அறையில் தனது மகனை வைத்திருந்தனர்.

    பின்னர் மறுநாள் காலை வாலிபருக்கு சிகிச்சை அளிக்க 2-வது மாடியில் உள்ள வார்டில் சேர்க்குமாறு பணியில் இருந்த டாக்டர் பரிந்துரை செய்தார்.

    சுய நினைவு இன்றி இருந்த தங்களது மகனை மாடிக்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலியை தேடினர். சக்கர நாற்காலி கிடைக்காததால் அவரது பெற்றோர் மகனின் 2 கால்களையும் பிடித்து தரதரவென லிப்ட்டுக்கு இழுத்து சென்றனர்.

    பின்னர் லிப்டிலிருந்து வார்டு வரை கால்களை பிடித்து இழுத்துச் சென்றதை கண்ட நோயாளிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதால் இதுகுறித்து விசாரணை நடத்த தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் உத்தரவிட்டார். இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் அரசு ஆஸ்பத்திரி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழக்க நேரிடும் எனவே இது போன்ற வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் கலெக்டர் ராஜீவ் காந்தி கூறுகையில்:-

    ஆஸ்பத்திரியில் தேவையான அளவு சக்கர நாற்காலிகள், உபகரணங்கள் உள்ளது. மேலும் உபகரணங்கள் தேவை என்றால் அதற்கு ஏற்றவாறு வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் கூறுகையில், வாலிபரை காலை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவத்திற்கும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவரது பெற்றோரே மகனை இழுத்துச் சென்று உள்ளனர். எங்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் நோயாளிகளிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

    Next Story
    ×