என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை- தேர்தல் முன்விரோதத்தில் நடந்த பயங்கரம்
    X

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை- தேர்தல் முன்விரோதத்தில் நடந்த பயங்கரம்

    • கொலை செய்யப்பட்ட அனுஜ்சவுத்ரி பா.ஜ.க.வின் கிசான் மோர்ச்சா அமைப்பில் இருந்தார்.
    • கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மொரதாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியை சேர்ந்தவர் அனுஜ் சவுத்ரி(வயது 34). பா.ஜ.க. நிர்வாகியான இவர் டெல்லி சாலையில் அமைந்து உள்ள மொராதாபாத்தின் பார்ஷ்வநாத் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    இன்று காலை இவர் சகோதரர் புனிதத்துடன் வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அனுஜ் சவுத்ரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அனுஜ்சவுத்ரியின் தலை மற்றும் தோள் பட்டையில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    இதை பார்த்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். சத்தம் கேட்டு அங்கு வந்த அனுஜ் சவுத்ரியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு மொராதாபாத்தில் உள்ள பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு எஸ்.பி. ஹேம்ராஜ் மீனா உட்பட போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்து கண்காணிப்பு கேமிரக்களில் அனுஜ்சவுத்ரியை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் உருவம் பதிவாகி இருந்தது. அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட அனுஜ்சவுத்ரி பா.ஜ.க.வின் கிசான் மோர்ச்சா அமைப்பில் இருந்தார். பா.ஜ.க.வின் மேலிட தலைவர்கள் மற்றும் மந்திரிகளுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலை செய்யப்பட்ட அனுஜ் சவுத்ரி 2021-ம் ஆண்டு சம்பல் மாவட்டத்தில் உள்ள அஸ்மோலி தொகுதியில் தொகுதி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 17 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    மேலும் சமீபத்தில், தற்போது உள்ள தொகுதித் தலைவருக்கு எதிராக அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். இது தொடர்பான முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×