என் மலர்
இந்தியா

தண்டவாளங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பி.
குண்டூர் அருகே தண்டவாளத்தில் இரும்பு ராடு கட்டி சபரி எக்ஸ்பிரசை கவிழ்க்க முயற்சி
- தண்டவாளத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டிருந்ததால் சபரி எக்ஸ்பிரஸ் தப்பியது.
- குண்டூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் ரெயில் நிலையம் அருகே 2 தண்டவாளங்களுக்கு இடையே இரும்பு கம்பி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக குண்டூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியை அப்புறப்படுத்தினர்.
அப்போது செகந்திராபாத்திலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வந்தது.
தண்டவாளத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டிருந்ததால் சபரி எக்ஸ்பிரஸ் தப்பியது.
இரும்பு கம்பி அப்புறப்படுத்தாமல் இருந்திருந்தால் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கி தடம் புரண்டு பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு இருக்கும்.
இதுகுறித்து குண்டூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.






