என் மலர்
இந்தியா

பள்ளி கழிவறைக்கு செல்வதில் தகராறு: 9-ம் வகுப்பு மாணவன் மீது தீ வைப்பு
- பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மாணவர்கள் சந்து மீது பெயிண்ட் ஆயிலை ஊற்றி தீ வைத்தனர்.
திருப்பதி:
திருப்பதி வடமலை சாகாளி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சந்து (வயது 15).
திருப்பதி அலிபிரியில் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் விடுதியுடன் கூடிய காது கேளாதோர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். விடுதியில் மாணவர்களுக்கு 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை சந்து உள்ளிட்ட மாணவர்கள் கழிவறைக்கு செல்ல வந்தனர். அப்போது யார் முதலில் செல்வது என வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பை சேர்ந்த மாணவர்கள் சந்துவிடம் பெயிண்ட் ஆயிலை கொடுத்து குடிக்க வேண்டும் என வற்புறுத்தினர். இதற்கு சந்து மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து மாணவர்கள் சந்து மீது பெயிண்ட் ஆயிலை ஊற்றி தீ வைத்தனர். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. வலியால் அலறி துடித்தார். மற்ற மாணவர்கள் சந்து மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவீத காயங்களுடன் சந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ரூயா ஆஸ்பத்திரியில் தனது மகனுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தரமான சிகிச்சை அளித்து மகனை காப்பாற்ற வேண்டும் என சந்துவின் பெற்றோர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.






