search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கண் பார்வையற்ற சிறுமியை கொன்ற ரவுடி- ஜெகன்மோகன் ரெட்டி வீடு அருகே நடந்த வெறிச்செயல்
    X

    கைதான ரவுடி

    கண் பார்வையற்ற சிறுமியை கொன்ற ரவுடி- ஜெகன்மோகன் ரெட்டி வீடு அருகே நடந்த வெறிச்செயல்

    • மனோகரம்மா காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்குச் சென்று பின்னர் இரவு திரும்புவது வழக்கம்.
    • வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய தனது தாயிடம் ராணி எஸ்தர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டம் தாதேப்பள்ளியை சேர்ந்தவர் யேசலு. இவரது மனைவி மனோகரம்மா. தம்பதிக்கு 17 வயதில் ராணி எஸ்தர் என்ற மகள் இருந்தார். இவர்களது வீடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ளது. மேலும் அருகிலேயே போலீஸ் நிலையமும் உள்ளது.

    ராணி எஸ்தருக்கு 7 வயதாக இருந்தபோது திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    அப்போது அவருக்கு திடீரென கண் பார்வை பறிபோனது. அவரை பல டாக்டர்களிடம் காண்பித்த போதும் கண் பார்வை சரியாகவில்லை.

    இந்த நிலையில் ராணி எஸ்தரின் தந்தை கண்ணாவரம் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் அவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    மனோகரம்மா காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்குச் சென்று பின்னர் இரவு திரும்புவது வழக்கம். ராணி எஸ்தரின் வீட்டின் அருகே வசித்து வருபவர் குக்கல ராஜு (வயது 30). எப்போதும் கஞ்சா போதையில் சுற்றிவரும் இவர் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோகரம்மா வழக்கம் போல் வேலைக்கு சென்று இருந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குக்கல் ராஜு கஞ்சா போதையில் ராணி எஸ்தர் வீட்டிற்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அதற்கு ராணி எஸ்தர் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடியதால் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய தனது தாயிடம் ராணி எஸ்தர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மனோகரம்மா மற்றும் சில பெண்கள் சேர்ந்து குக்குல ராஜுவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குக்கல ராஜு நேற்று மனோகரம்மா வேலைக்கு சென்றதை அறிந்து அவரது வீட்டிற்குள் புகுந்து ராணி எஸ்தரை சரமாரியாக வெட்டினார். அவரது தலை, கழுத்து பகுதியில் பயங்கரமாக வெட்டு விழுந்தது.

    ராணி எஸ்தர் வலியால் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது உயிருக்கு போராடியபடி கிடந்தார். குக்கல் ராஜு அங்கிருந்து தப்பி சென்றார்.

    உடனடியாக ராணி எஸ்தரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குக்கல் ராஜுவை கைது செய்தனர்.

    குக்கல ராஜு ஏற்கனவே கஞ்சா போதையில் பல பெண்களை பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் இருந்த போதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.

    மேலும் முதலமைச்சரின் வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில் கொலை நடந்தது எப்படி. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் முயற்சி செய்யவில்லை என அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×