என் மலர்
இந்தியா

ஆந்திரா ராஜமுந்திரியில் சென்னையில் இருந்து சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டது- 9 பயணிகள் ரெயில் ரத்து
- சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.
- ரெயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று ஓடியது.
திருப்பதி:
சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.
இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டு இருந்தது. ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்றபோது சரக்கு ரெயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.
அப்போது ரெயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இதனைக் கண்ட ரெயில் எஞ்சின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரக்கு ரெயில் பெட்டி தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய விசாகப்பட்டினம்-விஜயவாடா பயணிகள் ரெயில், விஜயவாடா-விசாகப்பட்டினம், குண்டூர்-விசாகப்பட்டினம், காக்கிநாடா-விசாகப்பட்டினம் உள்ளிட்ட 9 பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டதால் இன்று காலை வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் ஏராளமானார் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் தடம் புரண்ட ரெயில் பெட்டி சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.






