search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 மணி நேரம் சர்வரில் கோளாறு- ஏர் இந்தியா விமான சேவை நாடு முழுவதும் பாதிப்பு
    X

    6 மணி நேரம் சர்வரில் கோளாறு- ஏர் இந்தியா விமான சேவை நாடு முழுவதும் பாதிப்பு

    SITA சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 6 மணிநேரம் நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். #AirIndia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏர்இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்.ஐ.டி.ஏ. என்ற சர்வரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதனால் விமானங்கள் வருகை, புறப்பாடு போன்ற தகவல்களை பயணிகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வந்த பயணிகள் ஏர்இந்தியா விமான சேவைகள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.

    அவர்களிடம் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள், சர்வர் கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    நேரம் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்தது. மும்பை, டெல்லி, விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல மணி நேரம் காத்து கிடந்தனர்.

    விமானங்கள் எப்போது புறப்படும் என்ற தகவல் தெரியாததால் பொறுமை இழந்த அவர்கள் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பயணிகளை போலீசார் சமாதானப்படுத்தினர்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பயணிகள் விமான சேவை பற்றிய அறிவிப்பை சரியாக பெற முடியாததால் தவிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மும்பை, கொச்சி நகரங்களுக்கும், சிங்கப்பூர், கொழும்பு ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி கூறும்போது, “காலை 10.30 மணிக்கு பிறகு தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.

    இதேபோல நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளார்கள். இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளிநாட்டு விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோகானி கூறும்போது, “ஏர்லைன்சில் பயணிகள் சர்வரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும்” என்று கூறினார்.

    மேலும் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஏர் இந்தியா நிறுவனத்தின் எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது தொழில் நுட்ப குழு கோளாறை சரி செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. விரைவில் பழைய நிலைமை திரும்பி விடும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” என்றார்.



    அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் 9 மணிக்கு சரி செய்தனர். சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    கடந்த ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #AirIndia
    Next Story
    ×