search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது
    X

    21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது

    டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தததால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது. அங்கும் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    அவரது இறுதி ஊர்வலம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தை அடைந்தது. வாஜ்பாய் உடலை ராணுவ வாகனத்தில் இருந்து முப்படை வீரர்கள் இறக்கியபோது பிரதமர் மோடி துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். அவருடன் இருந்த தலைவர்களும் கண் கலங்கினர்.



    ராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ராணுவத்தினரின் சோக இசை மீட்கப்பட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் பாரத ரத்னா புகழ் வாஜ்பாய் புகழ் வாழ்க என முழக்கமிட்டனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்றனர். 

    வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்கள் வேத மந்திரங்கள் ஓதி இறுதி சடங்கு செய்தனர். அவரது உடல் மீது சந்தன கட்டைகள் வைக்கப்பட்டு எரியூட்டப்படடது. இறுதியாக, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் இறுதி சடங்கில் பாஜகவின் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    Next Story
    ×