search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைவருக்கும் இனி ரூ.15 லட்சம் கிடைக்குமா?: லல்லுவின் லொள்ளு கேள்வி
    X

    அனைவருக்கும் இனி ரூ.15 லட்சம் கிடைக்குமா?: லல்லுவின் லொள்ளு கேள்வி

    கருப்புப் பணத்தின்மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் இனி நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விழுந்து விடுமா? என லல்லு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    பாட்னா:

    கருப்புப் பணத்தின்மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் இனி நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விழுந்து விடுமா? என பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை கண்டுபிடித்து மீட்டு வருவேன். அந்தப் பணத்தை நாட்டு மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வீதம் செலுத்துவோம் என்று பொருள்படும்படி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பேசி வந்தார்.

    தற்போது கருப்புப் பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையாக புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், அதற்கு பதிலாக புதிய 2000, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

    கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடந்த 6 நாட்களாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

    மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ரெயில்வேதுறை முன்னாள் மந்திரியும், ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கடுமையாக கண்டித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வரிசையாக கருத்துகளை பதிவிட்டுள்ள லல்லு கூறியுள்ளதாவது:-

    கருப்புப் பணத்துக்கு நானும் எதிரானவன்தான் என்றாலும், அரசின் இந்த நடவடிக்கையில் தொலைநோக்கு சிந்தனை இல்லை என்று தெரிகிறது. மக்களுக்கு ஏற்படக்கூடிய அசவுகரியம் பற்றியும் அரசு சிந்தித்திருக்க வேண்டும்.

    இந்த அறிவிப்பால் வங்கி வரிசையில் காத்து நிற்கும் மக்களின் எத்தனை மணிநேர உழைக்கும் நேரமும், உற்பத்தியும் வீணாகியுள்ளது?

    இன்னும் 50 நாட்களுக்கு மட்டும் பொறுமை காக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ள நீங்கள் (பிரதமர்), உங்களது முந்தையை வாக்குறுதியின்படி இந்த 50 நாட்களுக்கு பிறகு மக்களின் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சம் ரூபாய் விழுந்து விடுமா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

    உங்களது இந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பிறகு மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் சென்று சேரவில்லை என்றால் இது மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டராகவே கருதப்படும்.

    அரசுக்கு சொந்தமான வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இவர்களை பாதுகாக்கதானா, இந்த நாடகம்? என்பதுபற்றி மோடியின் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பணமுதலைகளின் பட்டியலை பிரதமர் வெளியிட வேண்டும்.

    கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிகொண்டு, அதிக மதிப்பு கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது ஏன்?

    மேற்கண்டவாறு சரமாரியான கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் லல்லு எழுப்பியுள்ளார்.
    Next Story
    ×