search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    சூரியன்-பூமி இடையிலான தூரம் 66 சதவீதம் அதிகரிப்பா?
    X

    சூரியன்-பூமி இடையிலான தூரம் 66 சதவீதம் அதிகரிப்பா?

    • இதுவரை இல்லாத அளவிற்கு குளிர் அதிகரிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
    • வானிலை ஆய்வு மையம் கூறியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று பிஐபி உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலைதூர புள்ளியான அபெலியன் நிலையை அடையும் நிகழ்வு ஜூலை 4-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடைபெறும் என்றும், சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் இதுவரை இல்லாத அளவிற்கு குளிர் அதிகரிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிமீ என்றும், ஆனால் அபெலியன் நிகழ்வின் போது தூரம் 66% அதிகரித்து 15.20 கோடி கிமீ ஆக அதிகரிக்கப்போகிறது என்றும் அந்த தகவலில் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் செய்திகளும் வெளிவந்தன.

    சூரியனில் இருந்து பூமி விலகிச் செல்வது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தி பரவியது. இந்த தகவல் குறித்த உண்மைத் தன்மையை சரிபார்த்ததில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் அதிகரிக்கும் தூரம் குறித்து, வெளியான தகவல் தவறானது என தெரியவந்தது. 9 கோடி மைல்கள் என்பது 9 கோடி கிமீ என கவனக்குறைவாக செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குளிர் எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று பத்திரிகை தகவல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

    பூமியானது சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் அபெலியன் மற்றும் மிக அருகில் இருக்கும் பெரிஹெலியன் ஆகியவை பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள புள்ளிகள் மட்டுமே. அபிலியன் சூரியனில் இருந்து 15.2 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெரிஹெலியன் 14.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    பொதுவாக, பூமி சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சுற்றுப்பாதை ஒரு சரியான வட்டம் அல்ல என்பதால், சூரியனிலிருந்து பூமியின் தூரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும், சராசரியாக, பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர் ஆகும். இந்த சராசரி தூரம் ஒரு வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.

    பெரிஹெலியன் மற்றும் அபெலியனை ஒப்பிடும்போது, தூரத்தில் சுமார் 3.3% மாற்றம் இருக்கும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அபெலியனில் அதிகரிப்பு வெறும் 1.4% மட்டுமே. எனவே, சமூக வலைத்தள தகவல்களில் கூறியபடி, சில அபெலியன் நிகழ்வின்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 66% அளவுக்கு அதிகரிப்பதில்லை.

    இந்த ஆண்டில், பூமி சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் புள்ளியான அபெலியன், ஜூலை 4 அன்று நடந்தது. பெரிஹெலியன் கடந்த ஜனவரி 4 அன்று நடந்தது. அபெலியன் மற்றும் பெரிஹெலியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்கின்றன. ஏனெனில் பூமி எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறது மற்றும் சூரியனை சுற்றி வருகிறது. எனவே, ஜூலை 4 முதல் 22 ஆகஸ்ட் 2022 வரை அபெலியன் நிகழ்வு நடைபெறும் என்று கூறுவது சரியல்ல, அபெலியன் மற்றும் பெரிஹெலியன் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகள் என்பதே உண்மை. அதேபோல் வானியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த நிகழ்வு முக்கிய காரணம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×