search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து வைக்க கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
    X

    உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த கிஷோர்.

    11-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து வைக்க கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

    • தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார சேவைகளும் சிறிது நேரம் தடைப்பட்டது.
    • உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் மின்சாரத்தைப் பெற்று ரயில்களை இயக்கினர்.

    தாம்பரம்:

    தாம்பரம் சானட்டோரியம், துர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் மாணவி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

    ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனமுடைந்த கிஷோர் இன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 60 அடி உயர உயர் மின் கோபுரத்தில் திடீரென ஏறினார். மாணவியை திருமணம்செய்து வைக்க வேண்டும் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் துணை மின் நிலைய செயற்பொறியாளர் பொன்னரசு உடனடியாக அப்பகுதி முழுவதும் மின் இணைப்பை துண்டித்தார். இதற்குள் தாம்பரம் போலீசாரும் அங்கு வந்தனர். உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உயர் மின் அழுத்த கோபுரத்தின் உச்சியில் நின்று மிரட்டல் விடுத்த கிஷோருடன் மைக் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர் நீண்ட நேரம் கீழே இறங்க மறுத்து அடம்பிடித்தார். பின்னர் அவரது நண்பர்களை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் கிஷோர் கீழே இறங்க சம்மதித்தார். அவரை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர்.

    கிஷோரின் இந்த திடீர் போராட்டத்தால் காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை 2மணி நேரம் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சானட்டோரியம், குரோம்பேட்டை பகுதிகளில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபோல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார சேவைகளும் சிறிது நேரம் தடைப்பட்டது. உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் மின்சாரத்தைப் பெற்று ரயில்களை இயக்கினர்.

    இது தொடர்பாக கிஷோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×