search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை நகரில் தண்ணீர் சப்ளையை அதிகரிக்க செம்பரம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரை 2-வது ராட்சத குடிநீர் குழாய் பதிப்பு
    X

    சென்னை நகரில் தண்ணீர் சப்ளையை அதிகரிக்க செம்பரம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரை 2-வது ராட்சத குடிநீர் குழாய் பதிப்பு

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
    • செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் ஏரியில் மழை நீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து சென்னை நகரில் குடி நீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது. எனினும் இது குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.

    இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை நகருக்கு கூடுதலாக தண்ணீர் வினியோகிக்கும் வகையில் 2-வது ராட்சத் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இது கோயம்பேடு வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த 2-வது ராட்சத குடிநீர் குழாய், தேசிய நெடுஞ்சாலை எண்-4, பூந்தமல்லி புறவழிச் சாலையில் தரைக்கு அடியில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. சுமார் 6 மீட்டர் விட்டம் உடைய இந்த ராட்சத குழாய் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தில் அமைகிறது.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அமைக்கப்படும் ராட்சத குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை நகரில் கூடுதல் தண்ணீர் வழங்குவதற்காக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால் அந்த குழாய் அமைக்கும் பணி நேரடியாக எடுத்து வர முடியாது.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த பணி நடைபெற வில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 1.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புது குழாய் அமைப்பதற்காக ரூ.7.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணி விரைவில் முடிவடைந்ததுடன் சென்னைக்கு கூடுதலாக 530 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் செயல் உறுப்பினர் ராஜகோபால் சங்கரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 2-வது ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிந்து உள்ளது. இன்னும் சில மாதங்களில் மீதி உள்ள பணியும் முடிந்து விடும் என்று தெரிகிறது.

    Next Story
    ×