என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடுதல் பஸ்கள் இயக்காததை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
- மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
- சாலை மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, கடலங்குடி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி அமைந்துள்ள மணல்மேடு கிராமத்துக்கு மயிலாடுதுறை, கடலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி நேரங்களில் காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் இன்று காலை வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் சாலை மறியல் செய்ய முடிவு செய்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பேரணியாக புறப்பட்டனர். தகவல் அறிந்து போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால் தடுப்பையும் மீறி மாணவர்கள் முன்னோக்கி சென்று கல்லூரி அருகே வைத்தீஸ்வரன்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து மாணவர்களுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






