search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கில் 75 சதவீதம் வாக்குப்பதிவு- மின்னணு எந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

    • சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 130 முதல் 140 பேர் வீதம் மொத்தம் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட 8.56 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது.

    238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் மூலமாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைத்தனர்.

    சுமார் இரவு 8 மணி முதல் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கின.

    இறுதியாக வாக்குப்பதிவு முடிவடைந்த ராஜாஜிபுரம் 153-ம் எண் வாக்குச்சாவடி வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டும் சுமார் 11.30 மணிக்கு மேல் மையத்தை வந்தடைந்தன.

    வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சென்றடைந்ததும் அறைகளில் வைக்கப்பட்டன. கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், பொதுப் பார்வையாளர் ராஜகுமார் யாதவ், செலவின பார்வையாளர் கவுதம் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் தனி குழுவினர் கண்காணிக்கி றார்கள்.

    11 வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 130 முதல் 140 பேர் வீதம் மொத்தம் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    இதுதவிர 2 தீயணைப்பு வாகனங்களும் 40 தீயணைப்பு வீரர்களும் கண்காணிப்பு பணியில் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அந்த பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற யாருக்கும் அங்கு அனுமதி இல்லை.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. 16 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி நடக்கிறது. ஒரு அறையில் 10 மேஜைகளிலும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

    ஒரு மேஜையில் வாக்கு எண்ணும் பணியில் 2 அலுவலர்களும் அதை மேற்பார்வையிடும் பணியில் ஒரு நுண் பார்வையாளரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மொத்தம் 32 அலுவலர்கள், 16 நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அன்று மதியத்துக்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் தெரியவரும். மாலைக்குள் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    Next Story
    ×