search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரத்குமார்
    X
    சரத்குமார்

    ரவுடி கொலையில் 6 பேர் கைது

    அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே நடந்த ரவுடி கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பே ட்டையைஅடுத்த கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்ற  பொடிமாஸ் (வயது 27). இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவியும் 9 மாத பெண் கைக்குழந்தை உள்ளனர்.

    ரவுடியான  சரத்குமார் மீது லாஸ்பேட்டைபோலீஸ் நிலையத்தில், வெடிகுண்டு வழக்கு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

    மேலும் சரத்குமார் மீது 144 தடை உத்தரவும் உள்ளது. இந்த நிலையில் சரத்குமார் மட்டும் அரியாங்குப்பம் போலீஸ்  நிலையம் அருகே உள்ள அரவிந்தர் நகர் பகுதியில் தனது அக்காள் கணவர் வெங்கடேசன் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். அந்த வீட்டில்  வெங்கடேசன், சரத்குமார் மட்டுமே தங்கி இருந்து வந்தனர்.

    வீட்டில் வெங்கடேசன் மற்றும் சரத்குமார் தூங்கிக் கொண்டு இருந்தனர்.  அதிகாலையில் மர்ம நபர்கள் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.

    சிறிதும் எதிர்பாராத வெங்கடேசன் கதவை திறந்த போது அவரை அங்கிருந்த கும்பல் கட்டிப்போட்டு உள்ளே அழைத்துச் சென்று குளியலறையில் போட்டு மூடிவிட்டனர். 

    பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவுடி சரத்குமாரை தூக்கத்திலேயே அந்த கும்பல் சரமாரியாக பல இடங்களில் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார்.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்,  சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பிவைத்தனர்.

    தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக சரத்குமாரை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறப்பு புலனாய்வு படையினர் மூலம் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் சரத்குமாரை 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

    இதில் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (32), சவுந்தர் என்ற சவுந்தர்ராஜன் (29), கிருஷ்ணராஜ் (30), சந்துரு (23), பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (30), அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (24) ஆகிய 6 பேரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கொலை  யில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×