என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டையில் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாட்டின் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா நாளை (புதன்கிழமை) ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. 

    விழாவில் கலெக்டர் காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அரசுத்துறை பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், காவலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார். 

    மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்குகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் அதிகமாகக் கூட்டம் கூடுவதை தவிர்க்க விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் வீடு தேடி சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்கள். 

    விழாவில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றவும் வேண்டும். மேலும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 

    மைதானத்திற்குள் வரும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×