search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்கரை கோவில் வளாகத்தை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்
    X
    கடற்கரை கோவில் வளாகத்தை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்

    புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்கான பார்வையாளர் நேரத்தை நீட்டிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்கான பார்வையாளர் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கபட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது.

    இந்த புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு. இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் 2-வது இடமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் திகழ்ந்து வருகிறது. உலக அதிசயங்களில் இந்த கடற்கரை கோவிலும் ஒன்றாக திகழ்கிறது.

    மேலும் தொல்லியல் துறையின் பார்வையாளர் நுழைவு கட்டண வருவாயில் இந்திய அளவில் ஆக்ரா தாஜ்மகால் முதலிடத்திலும், மாமல்லபுரம் கடற்கரை கோவில் 2-வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த ஆண்டு 9 மாதங்களும், இந்த ஆண்டு 2½ மாதங்களும் மூடப்பட்டு சுற்றுலா முடங்கியது.

    தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சுற்றுலாவுக்கு கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி அனுமதி வழங்கப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அதனை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தொல்லில் துறை நிர்வாகம் ஆன்லைன் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.40 கட்டணம் பெற்று கொண்டு தினந்தோறும் 10 ஆயிரம் பயணிகள் கண்டுகளிக்கலாம் என இலக்கு நிர்ணயித்து செல்போன் இணையதள சேவை மூலம் பார்வையாளர் இணையசீட்டு வழங்கி வந்தது.

    குறிப்பாக தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட புராதன சின்னங்களை காண தொடக்கத்தில் பயணிகள் குறைவான அளவிலேயே மாமல்லபுரம் வந்தனர்.

    தற்போது வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிகின்றனர். குறிப்பாக காலை 7, 8, 9 மணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட தொல்லியல் புராதன சின்னங்கள் திறக்கும் வரை அங்கேயே சில மணி நேரம் வரை காத்திருந்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதே போல் மாலை 3, 4 மணிக்கு வரும் பயணிகள் 5 மணிக்கு புராதன சின்னங்கள் மூடப்படும் நிலையில் அவசர, அவசரமாக கண்டுகளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    குறுகிய நேரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பலர் வீடு திரும்புவதையும் காண முடிகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர்களின் குறைகளை போக்க தொல்லியல் துறை முன் வரவேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×