என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    ஜெயங்கொண்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

    ஜெயங்கொண்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாததால் மனவேதனை அடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி ஓட்டி அன்றாடம் வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாட்டுவண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால் தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் அவரது மாட்டுவண்டியை தா.பழூர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து பாஸ்கர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான பாஸ்கர் உதயநத்தம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×