search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான விக்னேஷ்- கொலையான ஏட்டு பானுப்பிரியா
    X
    கைதான விக்னேஷ்- கொலையான ஏட்டு பானுப்பிரியா

    விருதுநகரில் பெண் போலீஸ் ஏட்டு கழுத்தை நெரித்துக் கொலை

    குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 31). இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் விக்னேஷ் (31) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். இவர்கள் விருதுநகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    விக்னேசுக்கு மதுரை அரசு பணிமனையில் வேலை என்பதால் அவர் தினமும் அங்கு சென்றுவிட்டு வருவது வழக்கம். இதன் காரணமாக விக்னேஷ் மதுரைக்கு குடியேறி செல்வோம் என மனைவி பானுப்பிரியாவிடம் கூறி வந்துள்ளார்.

    ஆனால் அதற்கு அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையில் கணவன்- மனைவி வேலைக்கு செல்வதால் 2-வயது மகனை கவனித்துக் கொள்வதற்காக பானுப்பிரியாவின் உறவினர் கலைச்செல்வி (29) என்பவர் சில மாதங்களாக வீட்டில் தங்கியிருந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பானுப்பிரியா போலீஸ் குடியிருப்பை காலி செய்து விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் நூற்பாலைக்கு எதிரே தனது சகோதரி கற்பகம் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார். கற்பகத்தின் கணவர் பாண்டி சூலக்கரை போலீசில் ஏட்டாக உள்ளார்.

    புதுவீடு குடியேறியதில் விக்னேசுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு மீண்டும் வீடு பிரச்சனை தொடர்பாக விக்னேசுக்கும், பானுப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது கலைச்செல்வி வீட்டில் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தார்.

    கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் முற்றவே 2 பேரும் தங்கள் பெட்ரூமுக்கு சென்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர் வெளியே வந்த விக்னேஷ் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பானுப்பிரியா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உடனே அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது பானுப்பிரியா அங்கு பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்னேஷ், பானுப்பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பெண் போலீஸ் ஏட்டு கொலையான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×