என் மலர்
செய்திகள்

மணல்மேடு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி.
உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மழை காலம் என்பதால் காக்க வைக்காமல் உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு:
மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 800 நெல் மூட்டைகள் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக குறைந்த அளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 250 முதல் 500 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை அடுக்கி விற்பனை செய்வதற்காக காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையால் மணல்மேட்டில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற உள்ள நிலையில் விரைவில் கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்யக் கூடாது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






