என் மலர்
செய்திகள்

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர்
போலீசாருடன் அரசு பெண் ஊழியர் வாக்குவாதம்
முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன் எச்சரித்து வருகின்றனர்.
காரைக்கால்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன் எச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் காரைக்கால் பஸ்நிலையம் அருகே அனைத்து மகளிர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக கீதா போலீசாருடன் முகாமிட்டு முககவசம் அணியாமல் செல்வோர் மீது அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஸ்கூட்டரில் வந்த, காரைக்கால் நலவழித்துறை ஊழியர் கோமதி (வயது31) என்பவர், முகக்கவசம் அணியாமல், தனது துப்பட்டாவால் முகத்தை மூடி வந்துள்ளார். காற்றில் துப்பட்டா பறந்ததும், அதை கவனிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது.
போலீசாரை பார்த்தவுடன், கோமதி தனது துப்பட்டாவை மீண்டும் முககவசமாக மாற்றியுள்ளார். இதைப்பார்த்த கீதா, அந்த பெண்ணின் ஸ்கூட்டரை நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக, அபராதம் விதிக்க முயன்றார். அப்போது, கோமதி, ஆவேசமாக சத்தம் போட்டு, நான் ஏற்கனவே அபராதம் கட்டியுள்ளேன். என் வண்டியில் முககவசம் உள்ளது. அதனால், இப்போது அபராதம் கட்ட முடியாது என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர்.
இந்த சம்பவத்தை வீடியோ படம் எடுத்தவரையும் கோமதி ஆவேசமாக பேசி திட்டினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றி விவரம் அறிந்து, காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியரான கோமதி மீது, போலீஸ் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






