search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் -சாத்தூர் இடையே சீரமைக்கப்படாத நான்கு வழிச்சாலையில் தடுப்பு வேலி சேதமடைந்த காட்சி
    X
    விருதுநகர் -சாத்தூர் இடையே சீரமைக்கப்படாத நான்கு வழிச்சாலையில் தடுப்பு வேலி சேதமடைந்த காட்சி

    விருதுநகர்-சாத்தூர் இடையே நான்குவழிச்சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை தேவை

    விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழி சாலை வாகன போக்குவரத்திற்கு தகுதி இல்லாத நிலையில் சேதமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதில் இருந்து வாகன போக்கு வரத்து அதிகரித்துள்ளது. இந் நிலையில் நான்கு வழி சாலை அவ்வப்போது பல இடங்களில் சேதமடைந்த நிலையில் வாகன போக்குவரத்திற்கு தகுதி இல்லாத நிலையில் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினர் கோரியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மதுரை ஐகோர்ட்டு தலையீட்டின் பேரில் மதுரையில் இருந்து கள்ளிக்குடி வரையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது.

    ஆனால் மதுரையில் இருந்து சாத்தூர் வரையிலான நான்கு வழி சாலை பல இடங்களில் சேதமடைந்து தடுப்பு வேலி சேதமடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்தநிலையில் விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தாலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது.

    வழக்கமாக தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றம் தலையிட்டு சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால் அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்த பின்பு தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்கும் பணியை மேற்கொள்ளும் நிலை உள்ளது.

    மதுரையில் இருந்து திருமங்கலம் வரையிலான நான்கு வழிச் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை ஐகோர்ட்டு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்த பின்பு தான் அந்த பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டது.

    இதேபோன்று மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையும் நீதிமன்ற தலையீட்டின் பேரில் தான் சீரமைக்கப்பட்டது. ஆனால் விருதுநகர்-சாத்தூர் இடையேயான நான்கு வழிச்சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில் விபத்துகள் அதிகரிக்கும் நிலை தொடர்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்.ஆர்.நகரில் சேதமடைந்த மேம் பால சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் அந்தபகுதி விபத்து பகுதியாகவே மாறிவிட்டது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலும் தாமதிக்காமல் விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையை உடனடியாக சீரமைத்து வாகன விபத்துக்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் ஆர்.ஆர்.நகர் மேம்பால சீரமைப்புபணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி பல இடங்களில் சேத மடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் தடுப்பு வேலிகளை முற்றிலுமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×