என் மலர்
செய்திகள்

புதுவையில் தளர்வுகளுடன் ஊரடங்கு 7-ந் தேதி வரை நீட்டிப்பு - ஒர்க்ஷாப் திறக்க அனுமதி
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதை தொடர்ந்து ஏப்ரல் 26-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
காய்கறி, மளிகை, இறைச்சி உட்பட அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 முதல் மதியம் 12 வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
புதுவை அரசு தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வந்தது. தற்போது தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கவர்னர் தமிழிசை தலைமையில் கொரோனா மேலாண்மை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.
இந்த ஊரடங்கில் மின்சாரம், குடிநீர் குழாய், நீர் சுத்திகரிப்பு, மோட்டார் பழுதுநீக்குதல் (ஒர்க்ஷாப்) போன்ற அடிப்படை தேவைகளை சுய தொழிலாக செய்பவர்களுக்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.






