search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து ஏற்பட்ட பகுதியில் கூடியிருக்கும் பொதுமக்கள்.
    X
    விபத்து ஏற்பட்ட பகுதியில் கூடியிருக்கும் பொதுமக்கள்.

    கடலூர் தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி

    கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் குடிகாடு பகுதியில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் 50 சதவீத தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இன்று காலை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் அங்கு பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதனை கண்டு அங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருசில தொழிலாளர்கள் நெருப்பில் சிக்கி கொண்டனர். இதனால் அவர்கள் உயிர் பிழைக்க கூச்சல்போட்டனர்.

    இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். என்றாலும் இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கடலூர் முதுநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீ விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×