என் மலர்
செய்திகள்

சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன்பு 2-வது நாளாக பெண் தர்ணா
விருதுநகர்:
விருதுநகர் முத்துராமன்பட்டி 2-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஆர்த்தி (வயது 38). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சஞ்சய்கார்த்தி என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி மாவட்ட நீதிமன்றத்தில் செல்வராஜ் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாவட்ட கோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆர்த்தி கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜிடம் மனு கொடுத்தார்.
இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மார்ச் 31-ந் தேதிக்குள் உரிய பதில் அளிப்பதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஆர்த்தி தனது மகன் சஞ்சய் கார்த்தியுடன் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேர்ந்து வாழ கணவரை வலியுறுத்த வேண்டும் என அவர் கூறினார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போலீசார் சம்பவ இடம் சென்று ஆர்த்தியிடம் பேசினர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கணவர் வீட்டு முன்பு ஆர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






