என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாய்-மகனை காரில் கடத்தி சித்ரவதை

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போலி இரிடியம் விற்கும் கும்பல் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் தங்கமாரியப்பன் (வயது34), டி.வி. மெக்கானிக்.

    இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு எனது நண்பர் மூக்கையா என்பவர் மூலம் பாண்டிச்சேரியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் அறிமுகமானார்.

    அப்போது ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதாகவும், இதற்கு எனக்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டுமென்றும், அதற்குரிய பணத்தை தருவதாகவும் என்னிடம் கூறினார். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவே, ஜெய் சங்கர் ரூ. 1 லட்சத்தை கொடுத்தார்.

    இதையடுத்து நான் எலக்ட்ரானிக் போர்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். இதற்காக ரூ. 60 ஆயிரத்துக்கு அதற்குரிய பொருட்களை வாங்கினேன்.

    இந்த நிலையில் என்னால் குறிப்பிட்ட காலத்திற்குள் எலக்ட்ரானிக் போர்டை செய்து தரமுடியவில்லை. எனவே நான் ரூ. 40 ஆயிரத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு கூறினேன். இதனால் ஜெய்சங்கருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவத்தன்று ஜெய்சங்கர் தனது ஆதரவாளர்களுடன் காரில் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் அங்கு இல்லை.

    இதையடுத்து வீட்டில் இருந்த என் தாயாரை அந்த கும்பல் கடத்தி சென்றது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த நான் எனது தாயாரை விட்டுவிடுமாறும், ரூ. 1 லட்சத்தை தருவதாகவும் கூறினேன்.

    இதையடுத்து ஜெய்சங்கர் எனது தாயாரை விடுவித்து விட்டு, என்னை கடத்தி சென்றனர். கண்ணில் கருப்பு துணி கட்டிய அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காட்டுக்குள் அழைத்து சென்றனர்.

    அங்கு என்னை சரமாரியாக தாக்கிய அவர்கள் பல பத்திரங்களில் கையெழுத்துவாங்கி விட்டு, பணத்தை உடனே தரவேண்டும் என கூறி விடுவித்தனர்.

    எனவே என்னை கடத்தி சென்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய ஜெய்சங்கர், மங்கல்ரேவை சேர்ந்த முருகன் உள்பட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போலி இரிடியம் விற்கும் கும்பல் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×