என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
    X
    சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

    மாவட்டம் முழுவதும் ரூ.154 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தகவல்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரூ.154 கோடி செலவில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    சிவகாசி:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சிவகாசி சோலை காலனியில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.

    அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரொக்க பணத்தையும், பொங்கல் பரிசு தொகுப்பினையும் வழங்கினார்.

    அப்போது அவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 77 ஆயிரத்து 792 பேர் அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, உலர்திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு, வேட்டி-சேலை ஆகியவை வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.154 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 816 செலவு செய்துள்ளது. ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டி கையை கொண்டாட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அருமையான திட்டத்தை அறிவித்துள்ளார். நான் தற்போது இதை தொடங்கி வைத்துள்ளேன்.

    கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.100, 200, 500, 1000 என கொடுக்கப்பட்டது. தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வழங்கப்படுகிறது.

    பொதுமக்களின் தேவை அறிந்து திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவிக்கிறார். இதை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டத்தால் பல லட்சம் ஏழை மக்கள் பலன் பெறுவார்கள். பொங்கல் பண்டிகைக்காக விருதுநகர் மாவட்டத்துக்கு ரூ.154 கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தமாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலெக்டர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணை இயக்குனர் திலீப்குமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×