search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்படம்: உடைந்து கிடந்த பாட்டில்
    X
    உள்படம்: உடைந்து கிடந்த பாட்டில்

    அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்திய மதுபிரியர்கள்

    ஜெயங்கொண்டத்தில் புத்தாண்டையொட்டி அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று மது பிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை, பள்ளியில் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விளையாடுவது வழக்கம். தற்போது விடுமுறை நாட்களில் இளைஞர்கள், சிறுவர்கள் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். மேலும் பல்வேறு போட்டிகள் இந்த விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த மைதானத்தை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டையொட்டி ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மதுபிரியர்கள் இரவில் அந்த மைதானத்தை மது அருந்தும் கூடம்(பார்) போன்று பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும் போதையில் உணவு பொட்டல எச்சில் இலைகள், பிளாஸ்டிக் பைகள், பீர் பாட்டில்கள், பிராந்தி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அப்பகுதியில் வீசியுள்ளனர். மைதானத்தில் பாட்டில்கள் உடைந்த நிலையில் கிடக்கின்றன.

    இதனால் மைதானத்தில் நடைபயிற்சி செல்லவோ, விளையாடவோ முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று முன்தினம் மைதானத்தில் நடைபயிற்சி சென்றவர் காலில் உடைந்த பாட்டிலின் கண்ணாடி குத்தியதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் சமூக நலன் கருதி மைதானத்தில் கிடந்த உடைந்த பீர் பாட்டில்கள், பிராந்தி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை அகற்றி தூய்மைப்படுத்தியுள்ளனர்.

    உடையாத பாட்டில்களை சிலர் சேகரித்து, மூட்டையாக கட்டி தூக்கிச்சென்றனர். இந்நிலையில் மைதானத்தை பார் போன்று பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் உயரமாக சுற்றுச்சுவர் அமைப்பதுடன், அதன்மீது கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×