என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
நிரவியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரும் இவரது மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் வசித்து வரும் மகனை பார்ப்பதற்காக சென்றனர். நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல் உடைந்து கிடந்தது.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அது குறித்து ராமலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே புதுவையில் இருந்து காரைக்காலுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புகார் செய்ததன்பேரில் நிரவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ராமலிங்கத்தின் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






