என் மலர்
செய்திகள்

கவர்னர் கிரண்பேடி
தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க கவர்னர் அனுமதி
தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதுவை மாநில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் தனியார் கல்லூரிகள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடம் பெறுவதற்கான சட்டவரையறை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விரைந்து முடிவு எடுக்கவும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
லாஸ்பேட்டை சுப்ரமணிய சாமி கோவில் நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்குவது தொடர்பான அரசின் கோப்புக்கு சட்டத்துறையின் கருத்துகளை கேட்க அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான தொகையை, கடன் வாங்கி செலுத்துவதற்கும், குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் தலைமையில் உணவு ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர்கள் பணி செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகள், கூடுதல் செலவினங்கள் போன்றவற்றை தீர்க்க உள்ள நடுவர் அமைப்புக்கு பதிலாக பிரச்சினைகளை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்க்க அரசு சார்பில் அனுப்பப்பட்ட கோப்பின் மீது எந்த முடிவும் அறிவிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவித்தொகையாக ரூ.29 கோடி வழங்கவும், மோட்டார் வாகன வரி 2 ஆண்டுக்கான தொகை ரூ.21 கோடியை தள்ளுபடி செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் 719 வீடுகள் கட்டவும் அனுமதி அளித்துள்ளார்.
Next Story






