search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரனூர் சுங்கச்சாவடி
    X
    பரனூர் சுங்கச்சாவடி

    சுங்கச்சாவடியில் மாயமான ரூ.18 லட்சம் பறிமுதல்

    சுங்கச்சாவடியில் மாயமான ரூ.18 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்,

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ் வந்தத.

    அப்போது பஸ் டிரைவர் நாராயணனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பஸ் பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக உருவானது.

    சுங்கச்சாவடி ஊழியர்களை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரட்டியடித்தனர். மேலும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

    இது தொடர்பாக பஸ் டிரைவர் நாராயணன், கண்டக்டர் பசும்பொன் முத்து ராமலிங்கம், சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் கொள்ளைப் போனதா? என்று விசாரித்து வந்தனர்.

    ரூ.18 லட்சம் மாயமானது தொடர்பாக போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் 58 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அலுவலக ஊழியர்கள் 10 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் 8 பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுங்கச்சாவடியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்கிருந்த பணத்தை ஊழியர்கள் எடுத்து சென்றுள்ளனர். மோதலின் போது பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர் என்று கூறினால் சந்தேகம் வராது என்று பணத்தை கொண்டு சென்றுள்ளனர்.

    ஆனால் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது ஊழியர்களே பணத்தை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.

    இது தொடர்பாக 10 ஊழியர்களையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊழியர்கள் கூறும் போது, சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது பணத்தை பத்திரமாக எடுத்துச் சென்றதாக கூறியதாக தெரிகிறது.

    ஆனால், பணத்தை போலீசாரிடம் உடனே ஒப்படைக்காமல் இருந்ததால்தான் ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×